Followers

Tuesday 22 February 2022

ஞானிகள் சொல்கின்ற இதயம்

ஞானிகள் சொல்கின்ற இதயம்  பேசாலைதாஸ்


ஒரு கடற்கரை ஓரம் அங்கே ஒரு சின்ன கிராமம். அந்த கிராமத்தில் ஒரு சின்ன பள்ளிக்கூடம். கடற்கரையோரத்தில் உள்ள ஒரு விடுதியில் ஓய்வுக்காக ஒருவர் வந்து தங்கியிருந்தார்.

 பள்ளிக்கூடத்தில் ஏதோ விழா நடப்பது போல் தெரிந்தது. உடனே அவர் அங்கே போனார். அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார். பள்ளி ஆண்டு விழா நடக்கிறது என்று சொன்னார்கள். உள்ளே போனார். கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்கள் தயார் பண்ணிய பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த ஊர் மக்கள் எல்லாம் அதை கூட்டம் கூட்டமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவரும் ஆர்வமாக அதை எல்லாம் பார்த்துக் கொண்டே போனார்.

 ஒரு இடத்தில் ஒரு சின்ன ரயில் செய்து வைத்திருந்தார்கள். மின்சாரத்தில் ஓடுவதுபோல் தயார் செய்திருந்தார்கள். ஒரு சின்ன பொத்தான் இருந்தது அதை அழுத்தினால் ரயில் சுற்றிச் சுற்றி வரும். மாணவர்கள் எதிரில் நின்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர் அதை கவனித்தார்.

 அங்கிருந்த மாணவர்களிடம் விளையாட்டாக ரயில் எதனாலே ஓடுகிறது என்று கேட்டார்.

 சக்தியினாலேயே ஓடுகிறது என்று மாணவர்கள் சொன்னார்கள்.

அது என்ன சக்தி என்றார்.

அதற்குப் பேர் மின்சாரம் என்றார்கள் மாணவர்கள்.

 நீங்கள் மின்சாரத்தை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

 நாங்கள் பார்த்ததில்லை ஆனால் இதை செய்வதற்கு எங்களுக்கு உதவி செய்த ஆசிரியர் ஒரு பட்டதாரி. ஒருவேளை அவர் பார்த்து இருக்கலாம் என்றார்கள் மாணவர்கள்.

 அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டார்.

 அழைத்துக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

அவரிடம் மின்சாரத்தை பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டார் அந்த மனிதர்.

மின்சாரத்தை பார்க்கிறதாவது? நான் பார்த்ததே இல்லை என்றார் அந்த ஆசிரியர். இது மாதிரி எத்தனையோ இயந்திரங்களை செயல்பட வைக்கின்றது. ஆனால் உண்மையிலேயே அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஒருவேளை இந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியருக்கு தெரிந்திருக்கலாம். ஏனென்றால் அவர் ஒரு மேல்நிலைப் பட்டதாரி  என்றார். அவர் சரி என்று போய் தலைமையாசிரியரை கூட்டிக் கொண்டு வந்தார்கள்.அவரிடம் இதே கேள்வியை கேட்டார் .

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை. சக்தியை யாரும் பார்க்க முடியாது. ஆனால் அது செயல்படும் விதத்தை தான் பார்க்க முடியும் என்றார்.

 இப்போது இதுவரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தவர் சிரித்தார். சிரித்து விட்டுச் சொன்னார் சரி எதற்கும் கவலைப்படாதீர்கள் நான் தான் தோமஸ் அல்வா எடிசன் என்றார்.

 இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி , ஆச்சரியம்.  நீங்கள்தானா எடிசன் நீங்கள் எவ்வளவு மின்சார கருவிகளை கண்டுபிடித்து இருக்கிறீர்கள் நீங்கள் இந்த கேள்வியை கேட்கின்றீர்களே? ஆமாம் நான் தான் கேட்கிறேன் ஏன் என்றால் நான் மின்சாரத்தை பார்த்தது கிடையாது என்றார்.

அன்பு என்பதும் இப்படி பட்டதுதான் என்கிறார் ஓஷோ. அன்பு நமது உடற்கூறு அமைப்பிலே இல்லை. அது நமது உடம்பில் உள்ள சுத்த சக்தியின் வெளிப்பாடு. அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது .

இறைவன் மேல் கொண்ட பெருங்காதலினால் ஒரு ஒழுக்கமும், அடக்கமும் கொண்டு எத்தனை எத்தனை பாடல்கள் , தேவாரப் பதிகங்கள் போன்றன நமக்கு கிடைத்தன! 

அன்பு இல்லாமல் மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. அன்புதான் மனிதநேயம். அதுவே உயர்ஞானம்.

டாக்டர்கள் சொல்லுகின்ற இதயம் அது வெறுமனே இரத்தத்தை தள்ளுகிற ஒரு கருவி  அவ்வளவுதான் ஞானிகள் சொல்கின்ற இதயம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி. அங்கேதான் அன்பு உறைந்து கிடக்கிறது.  முடிந்தவரை உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம்.

வாழ்வின் உண்மையான பொருள், அன்பு செலுத்துவதிலும், அன்பு செலுத்தப்படுவதிலுமே பொதிந்துள்ளது. - அன்னை தெரசா

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...