Followers

Tuesday 12 December 2023

கர்மா பேசாலைதாஸ்

 கர்மா  பேசாலைதாஸ்


ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டு இருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சிறு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அந்த உணவை ஓர் அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். 

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பம் வந்தது. கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? 

-கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது, அது அதன் தவறு இல்லை. 

-விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது, அது பாம்பின் குற்றம் இல்லை. 

-அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. 

அது அவனும் அறியாமல் நடந்த விஷயம். 

....இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான். 

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, 'இதற்கான விடை விரைவில் கிடைக்கும். அது வரை பொறுமையாக இரு' என அறிவுறுத்தினான். ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல், 'இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள்' என்றும் கூறினாள். 

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது, அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று. காரணம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும். உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும். 

இவ்வாறு, நாம் செய்யும் கர்மவினைகள் ஒரு பக்கம் என்றால் நாம் மற்றவர்கள் செய்வதைப் பற்றி பேசி சேர்த்துக் கொள்ளும் கர்மவினைகள் ஏராளம் ஏராளம். எனவே, நாவடக்கம் தேவை.

No comments:

Post a Comment

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.  அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா!...