பின் தொடர்பவர்கள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 "எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ்

ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்க காத்திருந்தனர்...

முதல் மனிதன் : 

“எனக்கு கணக்கிலடங்கா காசும், 

பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்: 

“நான்  உலகில் சிறந்தோங்கி 

பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் : 

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் 

மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி: 

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! 

உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி.. 

இன்னும் ஐந்து பேரும் 

தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..! 

பத்தாவது மனிதன் கேட்டான்:

 “உலகத்தில் 

ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் 

மன நிறைவோடும் வாழ முடியுமோ, 

அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் 

அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ மனநிம்மதி, மன நிறைவு…

 நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?

 விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

 “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! 

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

 பத்தாவது மனிதனைப் பார்த்து : 

"நீ இரு..! 

நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..  

சிறிது  நேரம் கழித்து வருகிறேன்...”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது, 

அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! 

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; 

என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! 

துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ 

அது கையில் கிடைத்த பின்னும்,

 இன்னும் எதுவுமே கிடைக்காத 

அந்த 

பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! 

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

 தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! 

அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, 

அந்த இடத்திலேயே, 

அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன், 

கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! 

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே 

அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம் 

பத்தாவது மனிதனா..?

இல்லை 

'பத்தாது' என்கிற மனிதனா..? 

முடிவு எடுங்கள்.. 

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

இனிமையான எண்ணங்களுடன் மன நிறைவோடு வாழ்வோம்..

Knowledge is very important than money

Knowledge is  very important than money , Pesalaithas

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....

.

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*

.

அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....

.

இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*

.

கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.

.

இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்

*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*

.

வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .

.

""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .

.

""கலியுகம் "" என்பது இது தான் . *This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

.

மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான். 

.

*True.* 

*Knowledge is nowadays very important than money in this world.*. 

துன்பம் இல்லாத இன்பம்!

 துன்பம் இல்லாத இன்பம்! பேசாலைதாஸ்

முன்னொரு காலத்தில் ஒட்டகம் மேய்க்கும் ஒருவன் இருந்தான். அவன் தன் ஒட்டகத்தை மேய்த்து விட்டு ஒட்டக கூடாரத்தில் கொண்டு போய் கட்டி விடுவது உண்டு. அவன் வாழ்க்கையில் தனக்கு இருக்கும் பிரச்சனை பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தான். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் இன்பம் மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? என்றெல்லாம் யோசித்தவாரே சாலையோரத்தில் நடந்து கொண்டு இருந்தான்.

அப்பொழுது அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரிடம் சென்று, முனிவரே! மற்றவர்களுக்கு வாழ்க்கையில் தான் பிரச்சனை இருக்கிறது. ஆனால் எனக்கு மட்டும் வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கிறது. நான் என்ன செய்யலாம்? என்று கேட்டானாம். அதற்கு அந்த முனிவர், அவனைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, இன்று இரவு கூடாரத்திற்கு படுக்க செல்லும் முன் அங்கு கட்டப்பட்டுள்ள ஒட்டகங்கள் அத்தனையும் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று உற்று நோக்கு. ஒட்டகங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் படுத்த பின்னரே நீ உறங்க வேண்டும். அதுவரை விழித்துக் கொண்டு இரு என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

இரவு கூடாரத்திற்கு சென்ற மேய்ப்பன், ஒட்டகங்களை உற்று நோக்கி கொண்டிருந்தான். அங்கிருந்த சில ஒட்டகங்கள் தானாகவே படுத்து விட்டன. சில ஒட்டகங்களை அவன் கட்டாயப்படுத்தி படுக்க வைத்தான். ஆனால் அவனால் எல்லா ஒட்டகங்களையும் அப்படி ஒருசேர படுக்க செய்ய முடியவில்லை. ஒரு ஒட்டகத்தை படுக்க வைப்பதற்குள், இன்னொரு ஒட்டகம் எழுந்து நின்று கொண்டிருந்தது. கடைசி வரை அவனால் ஒருசேர ஒட்டகத்தையும் படுக்க வைக்க முடியவில்லை, அதனால் அவன் தூங்கவும் இல்லை.

மறுநாள் காலையில் முனிவரை சந்தித்த மேய்ப்பன், நடந்த விவரத்தைக் கூறினான். முனிவர் சிரித்துக் கொண்டே அதற்கு இவ்வாறு பதில் அளித்தார்! உன்னுடைய பிரச்சனையும் ஒட்டகத்தை படுக்க வைப்பதற்கு சமமானது தான். வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தானாகவே முடிந்துவிடும். சிலவற்றை நாமே போராடி முடித்து வைக்க வேண்டும். அப்படி நாம் செய்தாலும், வேறு ஒரு பிரச்சனை புதிதாக எழுந்து நிற்க தான் செய்யும். இவற்றையெல்லாம் சிந்தித்து கொண்டு இருந்தால் கடைசி வரை தூக்கம் என்பது இல்லாமல் போய்விடும்.

பிரச்சனைகளை பற்றிய சிந்தனைகளை முதலில் தூக்கி எறி. வருவது வரட்டும் என்று தைரியமாக உன் வேலையை மட்டும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிரு. பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தாலே! துன்பமில்லாத இன்பமான வாழ்க்கை நிச்சயமாக வாழ முடியும். யாருக்கு தான் பிரச்சினை இல்லை? பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதற்கு பெயர் தான் வாழ்க்கை, அதைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருப்பது அல்ல! என்று கூறி புரிய வைத்தாராம். இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்

வெருளி

 வெருளி   பேசாலைதாஸ்

ஒரு நாள் நான் ஒரு சோளக் கொல்லை பொம்மையைப் பார்த்து, ' உன்னைச் செய்த விவசாயிக்கு நீ தேவை.உன்னைக் கண்டு, அதிக விலங்குகள் உண்மை என்று நம்பி விடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மழையிலும், வெயிலிலும், கொளுத்தும் கோடையிலும், நடுக்கும் குளிரிலும், நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? ' என்று கேட்டேன்."

அதற்கு அந்தப் போலி மனித பொம்மை கூறியது : "உனக்கு என் மகிழ்ச்சி தெரியாது. மழை, வெயில், வெப்பம், குளிர் இவற்றில் கஷ்டப்பட்டாலும், அந்த விலங்குகளைப் பயமுறுத்துவதில் இன்பம் இருக்கிறது. என்னைக் கண்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் அஞ்சுகின்றன.ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இன்பம் பிறரை பயமுறுத்துவதில் இருக்கிறது."

நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் இந்தப் போலி மனிதனைப் போல இருக்க விரும்புகிறீர்களா?

உள்ளே ஒன்றுமில்லாமல், ஒருவரை பயமுறுத்திக் கொண்டு, மற்றொருவரை மகிழ்வித்துக் கொண்டு, மற்றும் ஒருவரை அவமதித்துக் கொண்டு, மற்றொருவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு இருக்க விரும்புகிறீர்களா?

உங்ளது வாழ்க்கை பிறருக்காகத்தானா?

எப்போதாவது நீங்கள் உள்ளே பார்ப்பீர்களா?

வீட்டிற்குள் யாராவது இருக்கிறார்களா,இல்லையா?

வியாழன், 31 ஜூலை, 2025

காது கேட்காது! **

காது கேட்காது! பேசாலைதாஸ்

மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது*_

தன்னுடைய கணவனுக்கு

காது கேட்கவில்லையோ என்று?

ஆனால்...

இதை கணவனிடம்

நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம்

இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....

டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...

"இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,...

கணவரின் காதில் விழவில்லை எனில்....

சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்

பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள்

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.

அதைக் கேட்டவுடன் மனைவிக்கு ஒரே _*குஷி.*_

அடுத்தநாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...

இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு? கேட்டாள்.

பதில் எதுவும் இல்லை...

பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,

ஹாலில் இருந்து கேட்டாள்,

சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். .

கணவரிடமிருந்து பதிலே இல்லை.

போச்சு _*இரண்டு ஸ்பீக்கரும் அவுட்*_ ஆகிவிட்டதுபோல என்று மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....

_*"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியாச்சானு?"*_ கேட்டாள்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே... அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,

ஏன்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து,ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்,

அது உன் காதில் விழவில்லையா?

காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?* என பொரிந்துத் தள்ளிவிட்டான்...

மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்.

தவறு தன்னிடம் தானா?*_

கதையின் நீதி*:-_

இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு...

அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

என்ன விசித்திரம்!!!

செவ்வாய், 29 ஜூலை, 2025

ஸரீகமா

ஸரீகமா பேசாலைதாஸ்


 “ஸரீகமா என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று திடுதிப்பென்று கேட்டார் சக பிரயாணி. 

“என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? அது குழந்தைகளுக்குத் தரும் பிரபல பால் உணவாச்சே! சிலோன் ரேடியோவை முடுக்கும் போதெல்லாம் ஸரீகமாவின் பெயர் தானே காதைத் துளைக்கிறது?” 

“அந்த உணவுப் பொருளைக் கண்டுபிடித்துத் தயாரிப்பவன் நான்தான்.” 

“ஆமாம், ஸரீகமா என்று இந்தப் ‘பிராடக்டி ற்கு ஏன் பெயர் தந்தீர்கள்? உங்களுக்குக் கர்நாட க சங்கீதம் என்றால் உயிரோ?” 

“அதெல்லாம் ஒன்றுமில்லை.”

“பின்னே?” 

“இதே கேள்வியை என்னைப் பல பேர் கேட்கிறார்கள் எனக்கும் கதை சொல்லி அலுத்து விட்டது. எனவே இந்தப் பெயருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சுவையான வரலாற்றை இதோ, ஒரு சிறு ‘புக்லெட் ‘டாக வெளியிட்டிருக்கிறேன். என்னிடம் கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் ஒரு பிரதி தந்து படிக்கச் சொல்வது வழக்கம்.. பிடியுங்கள் உங்கள் பிரதியை ‘ 

மகாலிங்கம் பரம்பரைப் பணக்காரர் அப்பாவிடமிருந்து அவருக்கு வந்த சொத்துக்கள் நாலு ரைஸ் மில்கள், ஒரு தோல் மண்டி, ஒரு பிளாஸ்டி தொழிற்சாலை முதலியன. அவர் திருமணம் செய்து கொண்ட கங்கை அம்மாளும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். 

இவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தும் தம்பதிகளுக்குக் குழந்தை ஏதும் இருக்கவில்லை. பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் கை விரிக்கப் போய் தெய்வ சகாயத்தை நாடினார்கள் தம்பதிகள்.

எத்தனையோ கோயில்களுக்கு போனார்கள். ஓர் ஆலமரம். அரச மரம் விடாது சுற்றினார்கள். காசியிலிருந்து வந்த ஊமை ஜோசியன் சொன்னானென்று தங்கத்தில் நாகம் செய்து அதற்குப் பாலாபிஷேகம் செய்தார்கள். இந்து கடவுள்களுடன் மற்ற மதங்களைச் சேர்ந்த சாமிகளையும் வழிபட்டுப் பார்த்தார்கள். ஊஹூம்! எதுவும் எதிர்பார்த்த பலன் தரவில்லை. 

“எப்படி குழந்தை பிறக்கும்னு கேட்கிறேன்? மாலியோடே கொள்ளு பாட்டியொருத்தி அரக்கி வேலைன்னா செஞ்சு கொண்டிருந்தாள்? எத்தனை குழந்தைகளைப் பிறக்காமல் அடிச்சாள் பாவி! அந்தப் பாவமெல்லாம் இவள் தலையிலே விடிஞ்சிருக்கு. பிராப்த கர்மாவை அனுபவிக்கிறாள். வேறென்ன இந்தப் பரம்பரைச் சொத்தெல்லாம் எங்கிருந்து வந்தது? எல்லாம் அந்த ராட்சஸி அநியாயமாகச் சம்பாதிச்சி வட்டிக்கு விட்ட பணம் தானே? சாமி இந்த மட்டோடு விட்டாரே. மேலும் துன்புறுத்தாமல்” என்று தம்பதியர் காது கேட்க அடிக்கடி அங்கலாய்ப்பாள் எண்பது வயதுக்கு மேலாகிவிட்ட சேஷிப்பாட்டி. 

மகாலிங்கத்தை மேலும் மேலும் துன்புறுத்துவது என்று விதி முடிவு கட்டியிருந்தது போலும்! இல்லாவிட்டால் அவருக்கு அந்த விசித்திரமான வியாதி ஏன் வர வேண்டும்? எத்தனையோ டாக்டர்கள் என்னென்னமோ செய்து பார்த்தார்கள். அந்த வியாதி இன்னதென்றே அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மேல் நாடுகளிலும் ட்ரீட்மெண்ட் நடந்தது. அங்கே ஒரு டாக்டர் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்! மகாலிங்கம் இனி மேல் வாழப் போவதெல்லாம் ஆறே ஆறு மாதங்கள் தானென்று! 

ஊருக்குத் திரும்பி வந்தவர் இங்கிலீஷ் வைத்தியத்திற்குத் தலை மூழ்கி ஆயுர்வேதம், யுனானி என்று மாதம் ஒரு நிபுணரைத் தேடி அலைந்தார். கடைசியில் ஓர் இமாலய யோகியைச் சந்தித்தார். அவர் டாக்டராக இருந்து யோகியாக மாறினவர். அவர் மகாலிங்கத்திற்குக் கொஞ்சம் நம்பிக்கை தந்தார். தொடர்ந்து சில வாரங்கள் மகாலிங்கம் முப்பது அவுன்ஸ் இளம் தாய்ப்பாலை மட்டும் அதிகாலையிலும், மாலையிலும் சில பச்சிலைகளுடன் சாப்பிட்டு வந்தால் அவரை வாட்டி வந்த பிணி சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிடும் என்று உறுதியாகக் கூறினார். மகாலிங்கம் வைத்தியத்தைப் பரீட்சை பண்ணிப் பார்ப்பது என்று தீர்மானித்தார். தாய்ப்பால் தேடி அலைந்தபோதுதான், அது கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தது. 

முக்கால்வாசி வீடுகளிலும் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதா? அந்த வழக்கம் இங்கில்லை முகத்திலடித்தாற் போல் சொல்லி விட்டார்கள். ‘பிகர்’ (Figure) கெட்டுப் போய்விடும் என்று எண்ணி அவர்களெல்லாம் குழந்தைக்குப் புட்டிப் பால் புகட்டுகிறார்களாம்! 

சமூகத்தின் உயர் மட்டத்தில் வாழுகிறவர்களை அணுகிப் பலனில்லை என்று தீர்மானித்து, லோட்டாவுடன் கும்மிருள் குடிசைகளை நாடினார் மகாலிங்கத்தின் மனைவி. அங்கே பால் தந்து உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் நிறைய இருந்தது. ஆனால் பால்தான் இல்லை. அநேகம் குழந்தைகள் அம்மையின் வற்றிய மார்பிலிருந்து இரத்தத்தைத்தான் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தன. 

கடைசியில் நாலு பெண்கள் பால் தர முன் வந்தார்கள். ஒரு தடவை ஒருவரால் அதிகம் போனால் மூன்று அவுன்ஸ்தான் தர முடியும். ஒரு நாளைக்கு எப்படியாவது ஆறு அவுன்ஸ் தர ஒப்புக் கொண்டார்கள். தங்கள் குழந்தைகளைக் கொஞ்சம் பட்டினி போட்டாவது ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் அவர்கள் உதவி செய்ய முன் வந்ததற்குக் காரணம். மகாலிங்கம் பணம் தருவதாகச் சொன்னவுடன் மறுத்ததுடன், மிகவும் கோபித்துக் கொண்டார்கள்! 

இமாலய யோகியின் மருந்து பலன் தந்தது. நான்கே வாரங்களில் அவர் பழைய மகாலிங்கமாக மாறினார். 

உடம்பில் தெம்பு வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆம்! செயற்கை முறையில் தாய்ப் பால் தயாரிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டார். இதற்காகவே ஒரு சிறு ஆராய்ச்சி சாலையைச் சொந்தச் செலவில் நிறுவினார். பெரிய பெரிய விஞ்ஞானிகளையெல்லாம் வரவழைத்துப் பணத்தைத் தண்ணீராட்டம் வாரி இறைத்தார். தனக்கு வந்த வியாதி வேறு யாருக்காவது வந்து அவர்கள் தாய்ப் பாலின்றிக் கஷ்டப்படக் கூடாதல்லவா? தவிர, செயற்கைத் தாய்ப் பால் தயாரிப்பதில் வெற்றி பெற்றால் ஏழைக் குழந்தைகளுக்கு வேறு உதவலாமே! 

ஒரு வருடத்திற்குப்பின் விஞ்ஞானிகள் கை விரித்தார்கள். இயற்கையுடன் போட்டியிட்டு அவர்கள் ஜெயிக்க முடியாதாம்! செயற்கை இரத்தம், செயற்கைத் தாய்ப்பால் எல்லாம் வீண் கனவு என்று ஐயத்திற்கு இடமின்றிச் சொல்லி விட்டார்கள். 

இது மகாலிங்கத்தை மிகவும் வருத்தியது. ஆனால் விஞ்ஞானிகள் சொன்ன இன்னொரு செய்தி அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. செயற்கைத் தாய்ப் பால் தயாரிப்பதற்காக அவர் செலவழித்த பணம் வீண் இல்லையாம். தாய்ப்பாலுக்குப் பதிலாக மிகச் சிறந்த சத்துள்ள பால் உணவு ஒன்றை உருவாக்கும் முறையை அவர்கள் அதிசயமாய் எதேச்சையாகக் கண்டுபிடித்திருந்தார்களாம். தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு அந்த உணவு ஒரு வரப் பிரசாதமாம்! 

“ஸரீகம வியாபார ரீதியில் பணம் சம்பாதிப்பதற்காகத் தயாரிக்கப்படும் பால் உணவு அல்ல. நம் நாட்டுக் குழந்தைகள் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து சிறந்த பிரஜைகளாக வேண்டும். என்பதுதான் அதன் ஆதார சுருதி.”

“ஆமாம், ஸரீகம என்று ஏன் பெயர் வைத்தீர்கள்?” 

“பார்த்தீர்களா, ‘புக்லெட்’டில் குறிப்பிட்டிருக்கும் முக்கியமான அந்த விஷயத்தைப் படிக்காமல் விட்டு விட்டீர்களே! நான் வியாதியாகப் படுத்திருக்கையில் எனக்குப் பால் தந்து உதவிய நாலு தியாகினிகளின் பெயர்களின் முதல் எழுத்துக்கள்தான் ஸரீகம… ஸரஸ்வதி, ரீடா. கல்யாணி, மல்லிகா. அவர்கள் ‘பப்ளிஸிடி’யை விரும்பாதவர்கள். நாலு பேருக்குத் தெரியாமல் எனக்கு உதவி செய்தவர்கள். என் தாய்க்கு ஈடாக நான் அவர்களை மதிக்கிறேன்”, என்று கதையை முடித்தார் மகாலிங்கம்

மந்திரப்பெட்டி

மந்திரப்பெட்டி பேசாலைதாஸ்

எங்கு திரும்பினாலும் தோல்வி என்ன வாழ்க்கை இது?'

வாழ்வோடு போராடி சலித்த ஒருவன் ஞானி ஒருவரை சந்தித்தான்.

"குருவே, எனக்கு ஏன் இந்த நிலைமை? வெள்ளம்போல பிரச்னைகள் என்னை மூழ்கடிக்கின்றன. இனி என்னால் ஒருபோதும் ஊருக்குத் திரும்பவே முடியாது'' என்று குரு முன் நின்று புலம்பினான் அவன்.

குரு அவனைக் கனிவோடு பார்த்தார். 

தன் அறைக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்தினார்.

அலமாரியில் இருந்த அலங்காரமான ஒரு பெட்டியை எடுத்து வெளியே வைத்தார்.

மகனே, இது சாதாரணப் பெட்டியல்ல. சகல பிரச்னைகளையும் தீர்க்கும் மந்திரப்பெட்டி. நீ உன் பிரச்னைகள் ஒவ்வொன்றாகச் சொல். அவற்றை இந்தப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிடுகிறேன். அதன் பின் நீ நிம்மதியாக வாழலாம்'' என்றார்.

குருவின் மீது நம்பிக்கை வைத்துத் தன் பிரச்னைகளை சொல்லத் தொடங்கினான்.

நான் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது பெரும் நஷ்டம் அடைந்துவிட்டது. தொழிலுக்காகக் கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள். அவகாசம் கேட்டால்கூடத் தரமறுக்கிறார்கள்.''

குரு, அவன் சொல்லிமுடித்ததும் காற்றில் எதையோ பற்றுவதுபோல் சைகை செய்து அதைப் பெட்டியில் போடுவதைப்போலப் பாவனை செய்தார்.

"ம், அடுத்து...'' என்றார்.

"என் மனைவிக்கு இவை எல்லாம் பிடிக்கவேயில்லை. வீட்டில் அடிக்கடி சண்டை. நிம்மதியாக ஒருநாள் போகமாட்டேன் என்கிறது'' என்றான்.

மீண்டும் அவர் அதேபோலச் செய்தார்.

"ம், அடுத்து...''

"என் பிள்ளைகள் என்னை மதிப்பதேயில்லை. இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என்றிருக்கிறது.''

குரு மீண்டும் காற்றில் எதையோ பிடித்துப் பெட்டியில் அடைத்தார். பின்பு,

"உன் பிரச்னைகள் எல்லாம் இந்தப் பெட்டியில் அடைக்கப்பட்டுவிட்டன. இனி இவை உன்னைத் தொடராது. எனவே நீ, இங்கு ஒருநாள் தங்கியிருந்துவிட்டு மறுநாள் உன் ஊருக்கே போகலாம்'' என்றார்.

அவனும் அப்படியே ஒருநாள் ஆசிரமத்தில் தங்கி, பின் தன் ஊருக்குப் புறப்பட்டான். இந்த ஒரு நாளில் அவன் மனம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. உண்மையிலேயே, குரு தன் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைத்துவிட்டார் என்று நம்பினான்.

ஊருக்குத் திரும்பினான். ஊரின் எல்லையிலேயே நின்றிருந்த ஓர் உறவுக்காரர், அவனைக் கண்டதும் 

ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டார்.

"நல்லா இருக்கியா, எங்கப்பா போன? உன்னைக் காணாம தவிச்சுப்  போயிட்டோம்'' என்றார்.

அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'அட, இவர் நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பவரா? இத்தனை நாள்களில் ஒருநாள்கூட இதை அவர் வெளிப்படுத்தியதே இல்லையே? அதுசரி, நானும்தான் வெளிப்படுத்தியதில்லை. எல்லாம் அந்த மந்திரப் பெட்டியின் மகிமை' என்று நினைத்துக்கொண்டான்.

கொஞ்சம் தூரம் நடந்ததுமே, அவனுக்குக் கடன்கொடுத்த நபர் ஒருவர் எதிர்ப்பட்டார். வழக்கமாக அவரைக் கண்டதும் பயந்து மறைந்து ஓடும் அவன், இந்தமுறை பயப்படவில்லை. அதுதான் குரு அவன் பிரச்னைகளை அடைத்துவிட்டாரே, நேருக்கு நேராக அவரைச் சந்தித்தான்.

கடன்கொடுத்தவரும், அவன் நேருக்கு நேராக வந்து நிற்பதுகண்டு ஆச்சரியப்பட்டார். நேற்றெல்லாம் அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டு, அவன் வீட்டுக்குப் போய் விசாரித்து உறுதி செய்துகொண்டார். 'மொத்த பணமும் போச்சே' என்கிற கவலை. மற்றொருபக்கம், 'ஒரு குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டானே ' என்கிற வருத்தமும் நிறைந்திருந்தது. அவனை மீண்டும் கண்டது அவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.

"என்னப்பா நீ? பணம் கொடுக்காமலும், 

பதில் சொல்லாமலும் நழுவி ஓடிக்கொண்டிருந்தாயே என்று நினைத்து கொஞ்சம் கறாராய்ப் பேசினேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. மனதில் வைத்துக்கொள்ளாதே. உன் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கொடு" என்று சொன்னார். 

இதைக் கேட்டதும் அவன் மனம் நெகிழ்ந்தது.

"ஐயா,மன்னித்துவிடுங்கள். நான் செய்த சில தவறுகளால் தொழிலில் பணத்தை இழந்துவிட்டேன். கூடிய சீக்கிரம் நல்ல முறையில் தொழில் செய்து, உங்கள் கடனை அடைந்துவிடுகிறேன்" என்றான். அவரும் 'சரி' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மந்திரப் பெட்டியின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இரட்டிப்பாகி விட்டது. ஆனாலும், 'சும்மாவே சண்டையிடும் மனைவி என்ன சொல்வாளோ' என்று பயந்தான். வீட்டை நோக்கிப் போனான். 

அவனைக் கண்டதும் அவன் மனைவி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். அவனை உபசரித்து," சாதாரணப் பணப்பிரச்னைக்காக நீங்கள் இப்படி வருந்தலாமா? இனி எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் உணவு உண்ண வாருங்கள்" என்றாள்.

பிள்ளைகளும், அப்பா வந்துவிட்டதை அறிந்து வீடு திரும்பி அவரைக் கட்டிக்கொண்டன. அவனுக்கு எல்லாம் புதியதாக இருந்தது. அன்றைய இரவில் தீர்க்கமாக ஆலோசித்து மறுநாள், மீண்டும் தொழில் தொடங்கினான்.

எதிர்பார்த்ததைவிடத் தொழில் சிறப்பாக நடந்தது. கடனை அடைத்து முடித்தான். கொஞ்சம் பணமும் சேர்ந்தது.

இவற்றுக்கெல்லாம் காரணமான குருவைச் சந்தித்து நன்றிகூற விரும்பினான். 

ஒருநாள் காணிக்கைகளை எடுத்து கொண்டு குருவினைக் காணச் சென்றான். காணிக்கைகளை குருவிடம் சமர்ப்பித்து வணங்கினான்.

"குருவே, அன்று நீங்கள் மட்டும் என் பிரச்னைகளை அந்தப் பெட்டியில் அடைக்காவிட்டால், நான் இந்த நேரம் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்..." என்று நெகிழ்ச்சியோடு கூறினான்.

குரு சிரித்துக்கொண்டே, "மகனே, அந்தப் பெட்டியில் உண்மையில் நான் எதையும் அடைக்கவில்லை. உன் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்டேன், அவ்வளவுதான். நீ பெருங்குழப்பத்தில் இருந்தாய். குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது. மேலும், நீ பிரச்னைகளில் இருந்து தப்பிப் போக நினைத்தாய். 

அது தவறு. மாறாக, பிரச்னைகளில் இருந்து விலகி நின்று யோசித்தால் மட்டுமே அதைத் தீர்க்கமுடியும். 

உன் பிரச்னைகள் உன்னைவிட்டு நீங்கிவிட்டன என்று நான் சொன்னதை நம்பி, நீ முற்றிலும் அதிலிருந்து விலகி நின்று அவற்றைப் பார்த்தாய். 

அவற்றின் தன்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு தீர்க்க முனைந்தாய், அதில் வெற்றியும் பெற்றாய். இதில் என் மாயம் எதுவும் இல்லை" என்றார் குரு.

அவன் கண்ணீரோடு குருவைப் பணிந்தான்.

துன்பங்கள் சூழ்ந்து அழுத்தும்போது இது சுமையே அல்ல என்று துணிச்சலுடன் சொல்லுங்கள். 

துன்பம் சிதறி ஓடுவதை உங்கள் அறிவால் உணர்வீர்கள். துன்பத்தில் இருந்து நிரந்தர விடுதலை பெறுவீர்கள்.

அறிவு தந்த வெகுமதி

அறிவு தந்த வெகுமதி பேசாலைதாஸ்


விதர்ப்ப நாட்டில் மாறன் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அன்பு மற்றும் புத்திசாமர்த்தியம்; உடையவன்.......

ஒருநாள் திடீரென அறிவிப்பு ஒன்று வந்தது. விதர்ப்பநாட்டின் இளவரசியை பூதம் ஒன்று தூக்கி காட்டுக்குள் சென்று விட்டது..........

பூதத்திடமிருந்து இளவரசியை மீட்பவருக்கு இளவரசியை திருமணம் செய்து அந்நாட்டின் வருங்கால அரசனாக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.........

அறிவிப்பைக் கேட்டதும் பலரும் பூதத்திடமிருந்து இளவரசியை மீட்க எண்ணி காட்டிற்குள் சென்றனர். ஆனால் ஒருவரும் திரும்பி வரவில்லை. நாட்கள் நகர்ந்தன........

இளவரசியை மீட்க ஒருவரும் முன்வரவில்லை. இந்நிலையில் இளவரசியை மீட்கப் போவதாக மாறன் தன்னுடைய தாயிடம் தெரிவித்தான்.......

“இளவரசியை மீட்கச் சென்றவர்கள் யாரும் இதுவரை உயிருடன் திரும்பவில்லை. நீ ஏன் வீணான முயற்சியில் ஈடுபடுகிறாய்?” என்று மாறனுடைய தயார் கேட்டார்......

அதற்கு அவன் “அறிவினால் பூதத்தினை வென்று விடலாம்” என்று கூறி கையில் சீசாவுடன் விடை பெற்றான். மாறன் காட்டின் வழியே பூதத்தைத் தேடிச் சென்றான்........

நண்பகலில் வெயிலால் களைப்படைந்து காட்டின் நடுவே பாழடைந்திருந்த மண்டபத்தின் அருகே தூங்கினான். அப்போது பெருத்த சத்தம் கேட்டு மாறன் கண் விழித்தான்.......

பெரிய உடலுடன் ஒற்றைக் கண் பிதுங்கிய நிலையில் கையில் இளவரசியைப் பிடித்துக் கொண்டு பூதம் இருந்தது. பூதத்தைப் பார்த்ததும் பயப்படாமல் பூதத்திடம் பேசத் தொடங்கினான்......

“ஏய் முட்டாள் பூதமே, நீ என்ன பலசாலியா?. நான் உன்னிடம் இருக்கும் இளவரசியை மீட்டுக் கொண்டு போக வந்துள்ளேன்.” என்றான்......

அதற்கு பூதம் “அடேய், பொடிப் பயலே, என்னுடைய பலம் பற்றி உனக்குத் தெரியாது. நான் சுதந்திரமாக இருக்கும்போது என்னுடைய உருவுத்தை மிகவும் பெரிதாக்கவும் முடியும். அதே நேரத்தில் மிகவும் சிறிதாக்கவும் முடியும்” என்றது.....

“இந்த வெட்டிப் பேச்சு எல்லாம் என்னிடம் வேண்டாம். நீ சொன்னது போல் என்னிடம் செய்து காட்டினால்தான் நான் நம்புவேன்.” என்றான்.....

“இதோ, இப்போதே செய்து காட்டுகிறேன் பார்” என்றபடி தன்னுடைய உருவத்தை மலைபோல் பெரிதாக மாற்றியது......

“சரி உன்னுடைய உருவத்தை எறும்பின் அளவிற்கு மாற்று பார்க்கலாம்” என்றான் மாறன்......

“இதோ” என்றபடி எறும்பின் அளவிற்கு தன்னுடைய அளவினை பூதம் மாற்றியது.....

இதுதான் சமயம் என்று மாறன் எறும்பின் அளவிற்கு இருந்த பூதத்தைப் பிடித்து சீசாவில் அடைத்து விட்டான்......

சுதந்திரம் இல்லாமல் அடைபட்ட பூதத்தால் தன்னுடை பழைய அளவிற்கு திரும்ப இயலவில்லை....

இளவரசியுடனும் பூத சீசாவுடனும் அரசனை கண்டான் மாறன். நடந்தவைகளைக் கூறினான். அரசன் அவனைப் பாராட்டி இளவரசியை திருமணம் முடித்து வருங்கால அரசனாக்கினான்......

புத்தி சாதுர்யத்துடன் கூடிய செயல்பாடு என்றைக்கும் வெற்றி அளிக்கும் என்பதை அறிவு தந்த வெகுமதி கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்........

அவரவர் வினைப்பயன்...

 அவரவர் வினைப்பயன்...பேசாலைதாஸ்


ஒரு காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப் பெண், தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள். 

வெகு நாட்களாக இத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு இல்லாமல், பல விரதங்கள் அனுஷ்டித்து ஒரு குழந்தைப் பிறந்தது. 

அந்தக் குழந்தையை இருவரும் சீராட்டி வளர்த்து வந்தனர். 

அந்த பாலகனை உணவூட்டி உறங்க வைத்துவிட்டு, நீர் எடுத்து வர அருவிக்குச் சென்றாள் அப்பெண்,

 தன் குடிலுக்குத் திரும்பியவள் திடுக்கிட்டாள். அவளுடைய பாலகனை ஒரு நாகம் தீண்டி விஷம் ஏறி உயிருக்கு போராடுகிறான்.

தரையில் விழுந்து அழுது புலம்புகிறாள் அவள். 

கூக்குரல் கேட்டு ஓடி வருகிறான் கணவன், 

விஷயமறிந்து, அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து அந்தப் பாம்பைப் பிடித்து சுபத்ரையிடம் இழுத்து வந்தான். 

சுபத்ரை, நம் குழந்தையை தீண்டிய இப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? என்கிறான் வேடன். 

இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா? எனக் கேட்கிறாள் சுபத்ரை. 

இப்பாம்பைக் கொல்லாவிட்டால் மாத்திரம் நம் குழந்தை உயிர்த்தெழுமா? என்கிறான் கணவன்.

இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல் போகுமா? 

பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது. 

ஆனால், துஷ்ட பிராணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் அல்லவா? 

இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசியது; 

மூடா! அவள் என்னைக் கொல்ல வேண்டாம் என்கிறாள். நீ கொல்வேன் என்று அடம்பிடிக்கிறாய். 

நன்றாக யோசித்துப்பார். இங்கு நீ, உன் மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள். 

நான் தீண்டிக் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ கொன்றிருக்கலாம். 

உங்கள் குழந்தையை மட்டும் தானே தீண்டினேன். அதுவும் என்னை ம்ருத்யு தேவதை ஏவியதால் தான் குழந்தையை கடிக்க வேண்டியதாயிற்று. 

இதில் என் தவறு எதுவுமில்லை என்றது. 

யார் அந்த ம்ருத்யு? என்றான் வேடன். 

ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்றினான். 

குழந்தை இறப்புக்கு நீயா காரணம்? என்றான் வேடுவன்.

நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான். பாம்பை ஏவி இந்தக் குழந்தையை கடிக்கச் செய்தேன் என்றான் ம்ருத்யு தேவதை. 

காலன் என்பவன் யார்? என வேடுவன் கேட்க, யமதர்மன் அவன் முன் தோன்றினான். 

இந்தக் குழந்தை இறக்க நீதான் காரணமா? 

நான் காரணமில்லை, என்னை பகவான் ஏவினான். நான் ம்ருத்யு தேவதையை ஏவினேன். ம்ருத்யு தேவதை பாம்பை ஏவினான். பாம்பு குழந்தையைக் கடித்தது என்றான் யமதர்மன். 

உன்னை ஏவிய அந்த பகவான் யார்? 

ஸ்ரீமந் நாராயணன் அந்த வேடுவனுக்குக் காட்சியளித்தான். 

எல்லாற்றுக்கும் காரணம் நீதானா? என்றான் வேடுவன். 

பகவான் கூறுகிறார்; மண்ணில் பிறந்த ஒவ்வொரு வரும் இறக்க வேண்டும் என்பதே விதி. 

பாம்பு கடித்து உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி. அது நிர்ணயமானதால் நானே நடத்தி வைத்தேன். 

எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள். 

நான் நம்ப மாட்டேன். என்று குழந்தையைக் கடித்த இந்தப் 

பாம்பை வெட்டியே தீருவேன் என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்க தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன். 

வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் வேறொரு பாம்பு புகுந்து இருந்து... அது அவனைத் தீண்டிவிட்டது.

உடனே அவன் வாயில் நுரை தள்ளி, மயங்கி கீழே விழுந்தான். 

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் மனைவி உடனடியாக காட்டுக்குள் சென்று மூலிகையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில் சாற்றை ஊற்றினாள். 

வேடுவன் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து பிழைத்துக் கொண்டான். 

இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர். 

பகவான் சொன்னார்; எந்தப் பாம்பு கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும் என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி. 

அப்படியிருந்தும் தன் குழந்தை பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு ஏன் அந்த ஞானம் வரவில்லை? குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை? 

ஆனால் உன்னைக் காப்பாற்றிவிட்டாள். 

அதற்கு என்ன? காரணம்? 

பாம்பு கடித்து பிழைக்க வேண்டும் என்பது உன் விதி.  பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது உன் குழந்தையின் விதி. 

அது அவரவர் வினைப்பயன்தான் என்றார். 

பரமாத்மா கூறியது எத்தகைய சத்தியமான வார்த்தை.

ஓட்டைப்பானை

ஓட்டைப்பானை  பேசாலைதாஸ்

ஒரு ஊர்ல ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான்.அவன் மிகவும் சிரமப்பட்டு பணம் சேர்த்து பானைகள் இரண்டை வாங்கினான்.வாங்கும் போதே ஒரு பானை ஓட்டையாக இருந்தது.அவன் தினமும் தண்ணீர் எடுத்து வர நீண்ட தூரம் செல்வான் .பானைகள் இரண்டையும் ஒரு நீண்ட மூங்கில் கொம்பில் கயிறுகளை கொண்டு கட்டி வைத்திருந்தான்.தினமும் தோலில் சுமந்து நீரை எடுத்து வருவான்.ஓட்டை இருந்த பானையில் வீடு வந்து சேரும்போது அரை பானை தண்ணீர் தான் இருக்கும்.அதற்காக அவன் கவலைப்படவில்லை.அந்த ஓட்டையை அடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஓட்டையாய் இருந்த பானைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.ஓட்டை பானையை மற்றொரு பானை கேலி செய்தது.உன்னால் தண்ணீர் வீணானதுதான் மிச்சம்.என்னால்தான் தண்ணீர் எசமானனுக்கு முழுதாய் கிடைக்கிறது.போ போ சீக்கிரம் உடைந்து விடுவாய் எனக் கூறியது.இதனைக்கேட்ட ஓட்டைப்பானை அழுதது.தன் எசமானனிடம் ஓட்டைப்பானை உங்களுக்கு என்னால் பயன் இல்லை.பிறகு என்னை தோளில் சுமந்து நீரை கொண்டு வரும் போது பாதிநீர்தான் இருக்கிறது என்னால் உங்களுக்கு கஷ்டம் என்னை விடுத்து வேறுபானை வாங்கிக் கொள்வது தானே எனக் கூறியது.இதைக் கேட்ட விவசாயி சிரித்து அட அசட்டுப்பானையே உன்னால் தான் நான் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன்.நான் உன்னை வலது தோளில் சுமந்து வருவேன் நாம் வரும் பாதையில் பூச்செடிகளை நட்டு வைத்துள்ளேன்.ஓட்டை வழியாக வரும் தண்ணீர் அந்த செடிகளை சென்றடையும்.இப்போது அவை நன்றாக பூத்து குலுங்குகின்றன.அதில் கொஞ்சம் பூவை கடவுளுக்கும், எனது அம்மா, அப்பாவின் கல்லறைக்கும் வைத்து விடுவேன்.மீதிப் பூவை சந்தையில் விற்று எனது வாழ்விற்கு பயன் படுத்துகிறேன்.எனது மகிழ்ச்சியான வாழ்விற்கு நீயே காரணம் எனக் கூறினான்.உண்மையில் நீதான் என் எசமானன்.இதனைக் கேட்ட ஓட்டைப்பானை மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.மற்றொரு பானை அதனிடம் மன்னிப்பு கேட்டது.

நீதி: குறைகளையும் நிறைகளாக மாற்றி வாழ்வதுதான் வாழ்க்

மனிதனின் ஆயுள் காலம்

 மனிதனின் ஆயுள் காலம் 


கவுதம புத்தரின் முன்பாக அவரது சீடர்கள் பலர் அமர்ந்திருந்தனர். தினமும் அவரிடம் புதிது புதிதாக விஷயங்களையும், தெளிவையும் கற்றுவந்ததால், அனைத்து சீடர்களின் முகத்திலும் ‘இன்று என்ன?’ என்ற எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.

புத்தருக்கு சீடர்களின் முகமே காட்டிக்கொடுத்து விட்டது.. அவர்களிடம் கற்றுக்கொள்ளும் அல்லது புதியதாக ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகுந்திருப்பதை.

அவர் தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். ‘ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்?’.

அனைவருக்குமே பதில் தெரியும் என்பதால், கூட்டத்தின் நடுவில் இருந்து வேகமாக எழுந்த ஒரு சீடன் ‘நூறு வருடங்கள்’ என்றான்.

புத்தரின் முகத்தில் புன்னகை. அதே புன்னகையுடன், ‘தவறு’ என்றார்.

சீடர்கள் அனைவரும் திகைத்தனர். ‘ஒரு மனிதனின் ஆயுள் காலம் 100 ஆண்டுகள் இல்லையா?. அப்படியானால் எவ்வளவு காலமாக இருக்கும். 100 ஆண்டுகளுக்கு மேல் மனிதன் வாழ்வது என்பது அத்தி பூத்தாற்போன்றதுதான். ஆகையால் வருடம் குறைவாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று கருதினர் சீடர்கள்.

உடனே ஒரு சீடன் எழுந்து, ‘எழுபது வருடங்கள்’ என்றான்.

‘இதுவும் தவறு’ என்றது புத்தரின் மென்மையான குரல்.

‘அறுபது வருடங்கள்’ என்றான் மற்றொரு சீடன்.

‘இது கூட தவறுதான்’ என்றார் புத்தர்.

இவை அனைத்தும் அதிக காலம் போல என்று எண்ணிய மற்றொரு சீடன் ‘ஐம்பது வருடங்கள்’ என்று கூறிவிட்டு, புத்தரின் பதிலை எதிர்பார்த்து மவுனமாக நின்றிருந்தான்.

புத்தரின் வார்த்தை அந்தச் சீடனையும் வருத்தம் கொள்ளச் செய்தது. ஆம்.. அந்தப் பதிலையும் தவறானது என்று கூறிவிட்டார் புத்தர்.

சீடர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மனிதனால் ஐம்பது ஆண்டுகள் கூடவா உயிர்வாழ முடியாது?’ என்று குழம்பிப் போனார்கள்.

கொஞ்ச நேரம் தன்னுடைய சீடர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் புத்தர். சரியான பதிலைச் சொல்ல முடியாமல் வருந்துவதை அவர்களின் முகமே காட்டிக்கொடுத்தது. தன்னுடைய சீடர்களின் மன வருத்தத்தை காணச் சகிக்காத புத்தர்..

‘ஒரு மனிதனின் ஆயுள் ஒரு மூச்சு விடும் நேரம்!’ என்றார்.

சீடர்கள் அனைவருக்கும் வியப்பு.

அந்த வியப்பு மாறாமலேயே, ‘மூச்சு விடும் நேரம், கணப் பொழுதுதானே!’ என்றனர்.

‘உண்மைதான். மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான். ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் இருக்கிறது. எனவே ஒவ்வொரு கணமாக நாம் வாழ வேண்டும்.

 மனிதர்கள் பலர் கடந்த கால சந்தோஷங்களிலும், இன்னும் பலர் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும், கவலையிலும்தான் வாழ்கிறார்கள்.

நேற்று என்பது முடிந்த விஷயம். அது இறந்து போன காலம். அதே போல நாளை என்பது யாரும் அறிந்துகொள்ள முடியாத எதிர்காலம். எனவே அவற்றில் நேரத்தை செலவிடுவது மடமை. அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும்’ என்றார் புத்தர்.

தலையின் எடை என்ன..?

 தலையின் எடை என்ன..?


முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன் இறந்துவிட, அண்ணன், தம்பி இருவரும் வறுமையில் வாடினர்.

“”தம்பி! நாம் இருவரும் இந்த ஊரில் கடினமாக உழைக்கிறோம். இருந்தும் வயிறார உண்ண முடியவில்லை. நான் வெளியூர் சென்று பொருள் ஈட்டித் திரும்புகிறேன். நீ அதுவரை நம் வீட்டைப் பார்த்துக்கொள். அதன்பிறகு, வளமாக வாழலாம்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

நெடுந்தொலைவு நடந்து ஓர் ஊரை அடைந்தான். அந்த ஊர் பண்ணையாரிடம் வேலை கேட்கச் சென்றான். அவரை பண்ணையார் என்று அறிந்துகொண்ட அவன், “”ஐயா! வேலை தேடி ஊருக்கு வந்தேன். எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள்,” என்று வேண்டினான்.

“”நல்ல இடத்திற்குத்தான் வந்துள்ளாய். எனக்கு ஒரு வேலையாள் தேவை. நல்ல ஊதியம் தருவேன். ஆனால்…” என்று இழுத்தார் அவர்.

“”எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே நடந்து கொள்வேன்!” என்றான் அவன்.

“”நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் மூன்று பொற்காசுகள் கூலியாகத் தருவேன். நான் என்ன வேலை சொன்னாலும் நீ செய்து முடிக்க வேண்டும். அப்படி உன்னால் முடிக்க முடியாத ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு பொற்காசுகளைக் குறைத்துக் கொள்வேன்!” என்றார் அவர்.

சூழ்ச்சியை அறியாத அவன், “”இன்றே வேலையில் சேர்ந்து கொள்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்து முடிக்கிறேன்!” என்றான். அவரிடம் வேலைக்குச் சேர்ந்த அவன் உண்மையாக உழைத்தான். நாட்கள் ஓடின. ஓராண்டு முடிய இன்னும் ஒருநாள் தான் இருந்தது.

“மூன்று பொற்காசுகள் நாளை கிடைக்கும்; ஊருக்குச் சென்று தம்பியுடன் வளமாக வாழலாம்’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் அவன். பொழுது விடிந்தது.

பண்ணையாரிடம் சென்ற அவன், “”ஐயா! இன்றோடு ஓராண்டு முடிகிறது. நீங்கள் சொல்லிய கூலியைக் கொடுத்தால் நான் ஊருக்குச் செல்வேன்!” என்று இழுத்தான்.

“”இன்று மாலை தான் நான் சொன்ன ஓராண்டு முடிகிறது. உனக்கு மூன்று எளிய வேலைகள் வைக்கிறேன். மாலைக்குள் அவற்றை முடித்துவிட்டுக் கூலியை வாங்கிக்கொள். பிறகு மகிழ்ச்சியுடன் உன் ஊருக்குச் செல்,” என்றார் அவர்.

“”முதல் வேலை என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டான் அவன்.

“”அதோ பார்… அங்கே இரண்டு விலை உயர்ந்த பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரிய ஜாடி; இன்னொன்று சிறிய ஜாடி. அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,” என்றார் அவர்.

“”ஐயா! எப்படி சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க முடியும். யாராலும் செய்ய முடியாத செயலைச் செய்யச் சொல்கிறீர்களே! இது என்ன அநியாயம்!” என்று அலறினான் அவன்.

“”செய்ய முடியுமா, முடியாதா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் சொன்ன இந்த வேலையைச் செய்யாவிட்டால், உன் கூலியில் ஒரு பொற்காசைக் குறைத்துக் கொள்வேன்!” என்று சொன்னார் அவர். வேறு வழியில்லாமல், “”ஐயா! அடுத்த வேலை என்ன? அதைச் சொல்லுங்கள்,” என்று கேட்டான்.

“”அந்த அறைக்குள், ஈரமான நெல் உள்ளது. நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும். அதுதான் இரண்டாவது வேலை,” என்றார் அவர். திடுக்கிட்ட அவன், “”ஈர நெல்லை வெளியே எடுத்துச் செல்லாமல் எப்படிக் காய வைக்க முடியும்? நீங்களே வழி சொல்லுங்கள்!” என்று கோபத்துடன் கேட்டான்.

“”வழி எல்லாம் எனக்குத் தெரியாது. நான் என்ன சொல்கிறேனோ அதை நீ செய்ய வேண்டும்!” என்றார் அவர்.

இரண்டு பொற்காசுகள் போய்விட்டன. ஒரு பொற்காசாவது கிடைக்காதா என்ற எண்ணத்தில், மூன்றாவது வேலை என்ன என்று சோகத்துடன் கேட்டான் அவன்.

“”இந்த வேலை மிக எளிய வேலை. என் தலையின் எடையை மட்டும் நீ சரியாக அளந்து சொல்ல வேண்டும்; அவ்வளவுதான்!” என்றார் அவர்.

“”ஐயா! உங்கள் தலையின் எடையை மட்டும் எப்படிச் சொல்ல முடியும்? ஓராண்டு உங்களிடம் உண்மையாக உழைத்தேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,” என்று கெஞ்சினான் அவன்.

“”நான் சொன்ன மூன்று வேலைகளை நீ செய்யவில்லை. ஒப்பந்தப்படி உனக்குத் தர வேண்டிய மூன்று பொற்காசுகளை நான் தர வேண்டாம். போய் வா. இனி நீ கெஞ்சுவதாலோ, அழுவதாலோ என் உள்ளம் இரங்காது!” என்று கண்டிப்புடன் சொன்னார் அவர்.

தான் நன்றாக ஏமாற்றப்பட்டது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தள்ளாடியபடி தன் ஊர் வந்து சேர்ந்தான் அவன். தம்பியிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதான்.

“”அண்ணா! உன்னை ஏமாற்றிய அந்தப் பண்ணையாரைப் பழிக்குப் பழி வாங்குகிறேன்!” என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் தம்பி. அண்ணன் வேலை பார்த்த அதே ஊரை அடைந்தான்.

பண்ணையாரைச் சந்தித்த அவன், “”ஐயா! நான் வெளியூர். வேலை தேடி இங்கு வந்தேன். ஏதேனும் வேலை கிடைக்குமா?” என்று பணிவுடன் கேட்டான்.

“ஏமாளிக்கு உலகில் பஞ்சமே இல்லை. புதிதாக ஓர் ஏமாளி கிடைத்திருக்கிறான். இவனை ஏமாற்றி வேலை வாங்க வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.

“”எனக்கும் உன்னைப் போல ஒரு வேலையாள் தேவை. நீ என்னிடம் ஓராண்டு வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்து முடிந்ததும், உன் கூலி மூன்று பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லலாம்,” என்றார்.

ஓராண்டு முடிவடைந்தது. ஏதும் அறியாதவன் போல், “”ஐயா! இன்றோடு ஓராண்டு முடிகிறது…” என்றான்.

“”உனக்கு மூன்று எளிய வேலைகள் வைத்திருக்கிறேன். அவற்றை முடித்துவிட்டு உன் கூலியை வாங்கிக்கொள்,” என்றார் பண்ணையார்.

“”இதோ! இங்கே விலை உயர்ந்த இரண்டு பீங்கான் ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரியது, இன்னொன்று சிறியது. நீ செய்ய வேண்டிய வேலை, அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை வைக்க வேண்டும். செய்துவிட்டு வா!” என்றார் அவர்.

“”எளிய வேலை தான்!” என்ற அவன், அங்கே ஒரு மூலையில் இருந்த தடி ஒன்றை எடுத்தான். அந்தத் தடியால் அவன் கண் எதிரிலேயே பெரிய ஜாடியை ஓங்கி அடித்தான். விலை உயர்ந்த அந்த ஜாடி உடைந்து நொறுங்கியது.

பதைபதைத்த அவர், “”டேய்! நான் என்ன சொன்னேன். நீ என்ன செய்கிறாய்?” என்று அலறினார்.

“”ஐயா! பெரிய ஜாடியை உடைத்தால் தான் அதைச் சிறிய ஜாடிக்குள் வைக்க முடியும். அதனால்தான் அந்த ஜாடியை உடைத்தேன்,” என்றான் அவன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் பண்ணையார்.

“”ஐயா! நான் செய்ய வேண்டிய இரண்டாவது வேலை என்ன?” என்று பணிவுடன் கேட்டான் அவன்.

“என்னிடமா உன் திறமையைக் காட்டுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று தனக்குள் கறுவினார் அவர்.

“”அந்த அறைக்குள் ஈர நெல் உள்ளது. அந்த நெல்லை நீ வெளியே எடுத்துச் செல்லாமல் காய வைக்க வேண்டும்,” என்றார்.

“”இதுவும் எளிய வேலைதான்,” என்ற அவன், அந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறி, கூரையைப் பிரித்துக் கீழே தள்ளத் தொடங்கினான். இதைக்கண்டு பதறிய அவர், “”டேய்! கூரையைப் பிரித்து என் வீட்டையே நாசம் ஆக்குகிறாயே! கீழே இறங்கு,” என்று கோபத்துடன் கத்தினார்.

“”ஐயா! அறைக்குள் இருக்கும் நெல்லைக் காய வைக்கச் சொன்னீர்கள். கூரையைப் பிரித்தால் தானே கதிரவன் ஒளி நேராக அறைக்குள் படும். அங்கிருக்கும் நெல் காயும். அதனால்தான் கூரையைப் பிரித்து எறிகிறேன். ஒவ்வொரு முறையும் வேலை இடுகிறீர்கள். அதை நான் செய்து முடிப்பதற்குள் நீங்களே தடுத்து விடுகிறீர்கள். இந்த முறையாவது முழுமையாகச் செய்ய விடுங்கள்!” என்றபடியே, மேலும் கூரையைப் பிரித்து எறிந்தான். அந்த வீடு, கூரை இல்லாமல் குட்டிச் சுவரைப்போல் காட்சியளித்தது. சரியான அறிவாளியிடம் மாட்டிக் கொண்டோம் என்ற உண்மை அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.

“நான் இடும் மூன்றாவது வேலையை எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது. இவன் ஏமாற்றம் அடைவதைப் பார்த்து மகிழ வேண்டும்’ என்று நினைத்தார் அவர்.

“”என் தலையின் எடை என்ன? நீ அதைச் சரியாகச் சொல்ல வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய மூன்றாவது வேலை,” என்றார் அவர்.

“”கடினமான வேலையாக இருக்கும் என்று நினைத்தேன். எளிய வேலைதான் தந்திருக்கிறீர்கள்!” என்ற அவன், தோட்டத்திற்குச் சென்றான். பெரிய பூசணிக்காய் ஒன்றைப் பறித்தான். அதைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்த அவன், “”உங்கள் தலையின் எடையும், இந்தப் பூசணிக்காயின் எடையும் ஒன்றுதான். இதோ தராசு உள்ளது. இதில் ஒரு தட்டில் பூசணிக்காயை வைக்கிறேன். இன்னொரு தட்டில் உங்கள் தலையை வெட்டி வைக்கிறேன். இரண்டும் சமமாக இருப்பதை நீங்களே பார்க்கலாம்!” என்று சொல்லிக்கொண்டே, கையில் கத்தியுடன் அவர் தலையை வெட்டுவதற்காக வந்தான்.

“”ஐயோ! இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டேனே. என் தலையை எடுக்காமல் விட மாட்டான் போல இருக்கிறதே!” என்று நடுங்கினார் அவர். இரக்கப்பட்ட அவன், “”இனிமேலும் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை விட்டுவிடுங்கள். எனக்குரிய மூன்று பொற்காசுகளுடன், என் அண்ணனை ஏமாற்றி எடுத்துக்கொண்ட மூன்று பொற்காசுகளையும் சேர்த்துக் கொடுங்கள். உங்களை உயிருடன் விடுகிறேன்,” என்றான் அவன். ஆறு பொற்காசுகளை அவனிடம் தந்தார் அவர். வெற்றியுடன் அங்கிருந்து புறப்பட்டான் அவன். பண்ணையாரும், அன்றிலிருந்து மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டார்.

திங்கள், 28 ஜூலை, 2025

விதிக்கு விளக்கம்

 விதிக்கு விளக்கம்

ஒரு செல்வந்தரின் வீட்டில் அமர்ந்து முல்லா அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். செல்வந்தருக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது.

"முல்லா அவர்களே விதி என்று மனிதர்கள் கூறுகிறார்களே அது என்ன?" என அவர் கேட்டார்.

"நாம் எதிர்பார்ப்பது நடக்காத போது அதற்கு விதி என்று பெயரிட்டு அழைக்கிறோம்." என்றார் முல்லா.

செல்வந்தருக்கு முல்லாவின் விளக்கம் சரியாகப் புரியவில்லை.

"இன்னும் சற்று தெளிவாக இதைப் பற்றிச் சொல்லுங்களேன்" எனச் செல்வந்தர் கேட்டுச் கொண்டார்.

முல்லா உடனே "என் அருமை நண்பர் அவர்களே! முதலில் நான் உங்களை எதற்காகச் சந்திக்க வந்தேனோ, அந்த விஷயத்தைக் கூறி விடுகிறேன். அப்புறம் விதியைப் பற்றித் தெளிவாக விளக்குகிறேன்" என்றார்.

"எதற்காகச் சந்திக்க வந்தீர்?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.

"எனக்கு ஒரு கோடிப் பொன் கடனாக வேண்டும் உங்களைக் கேட்டுப் பெறலாம் என்றுதான் வந்தேன்" என்றார் முல்லா.

செல்வந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. “இவ்வளவு பெரிய தொகை முல்லாவிற்கு எதற்கு?” என்று விளங்காமல் திகைத்தார்.

"நான் கேட்டது என்ன ஆயிற்று?" என்று முல்லா கேட்டார்.

"இவ்வளவு பெரிய தொகையைத் திடீரென்று கேட்டால் எப்படி?" என்றார் செல்வந்தர் தயக்கத்துடன்.

முல்லா சிரித்துக் கொண்டே, "உம்மிடம் கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் உங்களை நான் சந்தித்தேன் உங்களால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை அப்போது எனக்கு ஏற்படுகிற ஏமாற்றம் இருக்கிறதே அதை விதி என்று எண்ணி மனம் சமாதானம் அடையலாம்" என்று விதிக்கு விளக்கம் தந்தார் முல்லா.

பிறகு முல்லா சொன்னார் "நான் விளையாட்டுக்காகத்தான் உமம்மிடம் கடன் கேட்டேன் நீர் குழப்பமடைய வேண்டாம்" எனக் கூறிச் சிரித்தார்.

புதன், 23 ஜூலை, 2025

நிர்வாணம் என்பது உண்மையின் ஒரு வடிவம்.

நிர்வாணம் என்பது உண்மையின் ஒரு வடிவம். 

"கலாச்சாரம் என்றால் என்ன? எது கலாச்சாரம்?"

கிராமத்தில் மழை வேண்டி நிர்வாணமாக பிரார்த்தனை செய்த பெண் ஒருபோதும் விமர்சிக்கப்படவில்லை.

அழும் குழந்தைக்கு வெற்று மார்பகங்களுடன் வெளிப்படையாக பாலூட்டிய தாய் ஒருபோதும் விமர்சிக்கப்படவில்லை.

சாந்தி முகூர்த்தத்தின் போது நிர்வாணத்தின் புனிதத்தன்மை ஒருபோதும் கேள்வி கேட்கப்படவில்லை.

"கடவுளுக்கு செய்யும் சேவை" என்று காட்டப்பட்ட தேவதாசியின் நிர்வாணம் மகிமைப்படுத்தப்பட்டது.

நடுக்கூடத்தில் சேலை கழற்றப்பட்ட ஒரு பெண்ணின் சோகக் கதை ஒரு காவியமாக மாறியது.

பாலியல் தொழிலாளியின் நிர்வாணம்?

யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை—

ஏனென்றால் ஆண்களுக்கு, அவர்களின் காமத்தை பூர்த்தி செய்ய ஒரு இடம் தேவை அல்லவா?

ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் நிகழ்வை "மஞ்சள் நீராட்டு விழா" என தந்தையர்களும் ஆண்களும் இணைந்து கொண்டாடுவதும் இதே சமூகத்தில் தான்,,

இருண்ட மூலைகளிலும், புதர்களுக்குப் பின்னாலும், எத்தனை பெண்கள் வஞ்சகத்தால் சிதைக்கப்டுகிண்றனர்?

ஆனால் சிதைத்தவனே, ஆடைகளை சரிசெய்துகொண்டு வெளியே வந்து நிர்வாணத்தை கண்டு கொதிக்கிறான். "கலாச்சார காவலன்".

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சமூகம் அவளை நிர்வாணமாக்கி வருகிறது.

இவர்களின் ஆசைகளுக்காக. இவர்களின் பேராசைக்காக. இவர்களின் வசதிக்காக, அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

ஆனாலும், இந்த சமூகம் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை.

ஒருபோதும் குற்ற உணர்ச்சியை உணரவில்லை.

ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை.

எப்போதாவது, எங்காவது எழும் குரலும் சமூக ஊடக புள்ளிப் புயலில் காணாமல் போகிறது.

அவளுடைய விடுதலைக்காக.

அவளுடைய சுயாட்சிக்காக.

அவளுடைய சுதந்திரத்திற்காக...

அவள் தனக்காக நிர்வாணத்தைத் தேர்ந்தெடுக்கும்போது—

அப்போதுதான் உலகம் கோபத்தில் எழுகிறது.

அப்போதுதான் சமூகம் அதன் "கலாச்சாரம்" என்பதை தூசுதட்டுகிறது.

"கலாச்சாரம் என்றால் என்ன?" என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

பல நூற்றாண்டுகளாக பெண்களின் கண்ணியத்தை பறிப்பதை நியாயப்படுத்திய கருவி கலாச்சாரம்.

பாரம்பரியத்தின் திரைக்குப் பின்னால் பாசாங்குத்தனத்தை மறைக்கும் கேடயம் கலாச்சாரம்.

சமூகம் நினைவில் கொள்ளட்டும்:

ஒரு நிர்வாணப் பெண்ணின் உடலில் நீங்கள் காணும் சதை உங்களை வளர்த்த, நீங்கள் வளர்ந்த அதே சதைதான்.

உங்கள் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் படைக்கப்பட்ட அதே சதை தான்.

நீங்கள் உண்மையிலேயே கலாச்சாரத்தை மதிக்கிறீர்கள் என்றால், உங்கள் சொந்த குடும்பத்திற்கு அப்பால் - மற்றவர்களை தாய்மார்களாகவும் சகோதரிகளாகவும் பார்க்கும் கண்கள் வேண்டும் என கடவுளை கேளுங்கள்.

பெண்கள் உங்கள் தேவைகளுக்கு சேவை செய்யும்போது மட்டுமல்ல, எப்போதும் அவர்களை மதிக்கும் நல்ல இதயத்திற்காக கடவுளை கேளுங்கள்.

போட்டிருக்கும் பெண்களின் ஆடைகளுக்குள் ஊடுறுவி உள்ளே நிர்வாணத்தை தேடாத, கண்கள் கொண்ட நல்ல ஆண்மகனே போற்றப்படுவான்.

நிர்வாணம் என்பது உண்மையின் ஒரு வடிவம்.

சின்னக் குழந்தையாகிவிடு

சின்னக் குழந்தையாகிவிடு  பேசாலைதாஸ்

கடவுளிடம் பேச எந்த மொழி வேண்டும் ?

ஆசிரமத்து     குருநாதரிடம்  புதிதாய்   வந்த  ஒருவன்,

"நான் கடவுளைப்  பார்க்கணும்" என்றான். 

"அதற்க்கு ஏன்  என்னைத்தேடி வந்தாய்?" 

"கடவுளை எப்படி பார்பது எந்த மொழியில் பேசுவது என்கிற  விவரம் 

தெரிந்துகொள்ளவந்தேன் " 

"சரி   என் சீடர்கள்  சிலபேர் ஆசிரம தோட்டத்தில் இருக்கிறார்கள் பார்த்துவரலாம் 

என்னுடன் புறப்படு" 

தோட்டத்தில் ஒருமரத்தடியில் அவர் சிஷ்யர்கள் இருவர்  பேசிக்கொண்டு இருந்தனர் 

குருநாதர்  வந்தவனிடம்"அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்றார். 

"ஒருவர் இன்னொருவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்" என்றான்.

"சரி அதோபார்!  அந்த மரத்தடியில்  ஒருவன் அமர்ந்து என்ன செய்கிறான்?' என்று 

இன்னொரு மரத்தின்கீழ் தனியே உட்கார்ந்திருந்தவனைச் சுட்டிக்காட்டி 

கேட்டார். 

"அவர் சும்மா உக்காந்திருக்கார்" என்றான்.

குருநாதர் சிரித்தார். 

பிறகு."முதலில் பார்த்த இரண்டுபேரும் தங்கள் இருவருக்குள்

பேசிக்கொண்டார்கள்.

இந்தமனிதன்  கடவுளோடு பேசிக்கொண்டு இருக்கிறான் " என்றார். 

"என்ன சொல்கிறீர்கள்?"  என குழம்பினான் வந்தவன். 

"ஆமாம்  ஒரு மனிதன் இன்னொரு  மனிதனுடன்  பேச மொழி வேண்டும் அதுதான் தொடர்புச்சாதனம். 

ஒரு மனிதன் கடவுளோடு பேச  மௌனம் தொடர்புசாதனம்.  

கடவுளுடன்  நீ தொடர்புகொள்ள   மௌனமாக இரு" 

 வந்தவன் சற்று நேரம் யோசித்து கடவுளோடு எந்த  மொழியில் பேசவேண்டும் என்று 

புரிந்துகொண்டான். 

அந்தக்கடவுள் தனக்குள்ளே இருக்கிற  ஓர் உண்மை என்பதையும் புரிந்துகொண்டான். 

ஓஷோ சொல்கிறார்... 

"நீ  பிறந்தபோது மௌனத்தை    தான் உலகத்துக்கு  கொண்டுவந்தாய்.. 

மொழி உனக்குதரப்பட்டது....சமூகத்துடன் பழக அது ஒர் அன்பளிப்பு ...அது ஒருகருவி 

...சாதனம், 

ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டுவந்தது. 

அந்த மௌனத்தை அடைய மீண்டும் 

முயற்சி செய் ...அதாவது சின்னக் குழந்தையாகிவிடு

குரங்கை நினைக்காதே!

குரங்கை நினைக்காதே! பேசாலைதாஸ்

ஒரு ஜென் துறவியொருவர் அந்த ஊர் மடத்தில் வந்து தங்கியிருந்தார்.  உள்ளூர்க்காரன் ஒருவன் அவரைத் தேடி வந்தான்.

``என்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியவில்லை. என் வயதுத் தோழர்கள், என் உடன் படித்தவர்கள், ஏன்... அடுத்த வீட்டுக்காரன் உள்பட எல்லோரும் எங்கெங்கேயோ போய்விட்டார்கள். நான் இன்னும் ஒரு துளிகூட முன்னேறவில்லை. நான் என்ன செய்யட்டும் ஐயா?’’

இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் அவன் துறவியிடம் வேண்டி வந்திருந்தான். துறவி அவனிடம் சில கேள்விகள் கேட்டார்.

``என்ன வேலை பார்க்கிறாய்?’’

``கூலி வேலை.’’

``வருமானம்?’’

``போதுமான அளவுக்கு இல்லை. இருக்கிறதை வைத்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.’’

``வேறு வேலைக்கு முயற்சி செய்யவில்லையா?’’

``பயமாக இருக்கிறது. புது இடம், புது எஜமானன் சரியில்லை என்றால் என்ன செய்வது என்கிற அச்சம்...’

``சுயதொழில் செய்ய உனக்கு ஆர்வம் இல்லையா?’’

``இருக்கிறது. ஆனால், அதுவும் பயமாக இருக்கிறது. தொழில் தொடங்கி நான் அதில் என் பொருளை இழந்துவிட்டால் என்ன செய்வது? என்னிடம் வியாபார நிமித்தமாக வருபவர்கள் என்னை ஏமாற்றிவிட்டால் நான் என்ன செய்வேன்? இதையெல்லாம் யோசித்துத்தான் நான் தொழில் தொடங்குவதை தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்...’’

ஜென் குரு அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

``சொல்லுங்கள் குருவே... நான் என்ன செய்ய வேண்டும்? என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கிற உபாயம் ஏதாவது இருக்கிறதா? எத்தனை நாள் பயிற்சி எடுக்க வேண்டும்? அதற்கான மந்திரங்கள் இருந்தால்கூட சொல்லுங்கள். நிச்சயம் அதைக் கடைப்பிடிக்கிறேன்...’’

``உன் பிரச்னை தீர ஒரு வழி இருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பாயா?’’

வந்தவனின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ``நிச்சயமாக குருவே... நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.’’ - அவன் குரலில் அப்படி ஓர் உறுதி.

``சரி, இன்றைக்கு ஒரு நாள் இரவு மட்டும் நான் சொல்கிறபடி செய். உன் பிரச்னை  தீர்ந்துவிடும்’’ என்றார்.

 ``ஒரு நாளில் என் பிரச்னை  தீர்ந்துவிடுமா, அப்படி என்ன அற்புத மந்திரம் அது? உடனே சொல்லுங்கள் குருவே...’’ என்றான்.

``மந்திரம் எல்லாம் இல்லை. இன்று இரவு மட்டும் நீ குரங்குகளைப் பற்றி நினைக்கக் கூடாது.’’

``என்னது குரங்கா... நினைக்கக் கூடாதா? மந்திரம் எல்லாம் ஒன்றும் இல்லையா?’

``எதிர்க் கேள்வி கேட்காதே! நான் சொல்கிறதை மட்டும் செய்!’’

துறவியின் குரலில் உஷ்ணம் ஏறிக் கிடந்ததை உணர்ந்தான். அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தான். வழியிலேயே துறவி கூறியதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. குரங்கு, அதன் வால், பற்கள், உருண்டைக் கண்கள், சேட்டைகள்... ``சே!’’ என்று தலையை உதறிக்கொண்டான்.

`ஏன், துறவி குரங்கு பற்றி நினைக்க வேண்டாம் எனச் சொன்னார்? நான் குரங்குக்கு ஏதாவது துன்பம் இழைத்திருப்பேனோ? அப்படி ஒன்றும் நினைவில்லையே. ஒருநாள் மலையில் ஒரு குரங்கைப் பார்த்தபோது அதுவல்லவா என் சோற்று மூட்டையைப் பறித்துக்கொண்டு ஓடியது? அந்தச் சமயத்தில்கூட நான் அதை ஒன்றும் செய்யவில்லையே! ஒரு சிறு கல்லைக்கூடத் தூக்கிப் போடவில்லையே! ஒருவேளை கடந்த பிறவியில் குரங்குக்கு ஏதாவது தீங்கிழைத்திருப்பேனோ!  சரி... துறவியே சொல்லிவிட்டார். அதனால், நிச்சயம் இதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால், கண்டிப்பாக இரவில் குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது’ என்று மனதுக்குள் நினைத்தபடி வீட்டுக்கு நடந்தான்.

இரவு நெருங்கியது. வேலைகளை முடித்துவிட்டு தூங்கத் தயாரானான். தூக்கம் வரவில்லை. குரங்கு குறித்த சிந்தனையே அவனைத் துரத்தியது. ஜன்னலில் ஒரு குரங்கு ஏறி அவனையே பார்ப்பதாக எண்ணம். கதவைப் பிராண்டுவதாக உள்ளுணர்வு. நெடு நேரத்துக்கு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல், களைப்பால் கண்ணயர்ந்தான். கனவிலும் குரங்கள் அவனைத் துரத்தின. நிஜத்தில் அவனை ஒரு குரங்கு பிராண்டவில்லையே தவிர, மற்ற எல்லாம் நடந்தது. குரங்குச் சிந்தனை அவனைப் பாடாகப்படுத்தி எடுத்துவிட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தச் சிந்தனையை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பைத்தியம் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான். எப்போது விடியும் எனக் காத்திருந்து ஜென் துறவி தங்கியிருந்த மடத்துக்கு ஓடினான். அவரைச் சரணடைந்தான்.

``குருவே, நான் முதலாளி ஆக வேண்டாம்.  இதைவிட அதிகமாகக் கூலி கிடைக்கும் வேலைகூட வேண்டாம். தயவு செய்து, அந்தக் குரங்களிடமிருந்து மட்டும் என்னைக் காப்பாற்றுங்கள்’’ மன்றாடியவன் மேலும் தொடர்ந்தான்.

``ஒன்று மட்டும் உண்மை. நான் குரங்குக்கு ஏதோ பாவம் இழைத்துவிட்டேன் என்பது மட்டும் தெரிகிறது. அதற்கு என்ன பரிகாரம் வேண்டுமானாலும் செய்துவிடுகிறேன். இந்தக் குரங்குச் சிந்தனை என்னை தற்கொலை செய்துகொள்வது வரை தூண்டுகிறது. காப்பாற்றுங்கள் குருவே!’’

அந்த ஜென் குரு மென்மையாகச் சிரித்தார். ``உண்மையில் நீ எந்தக் குரங்குக்கும் பாவம் செய்யவில்லை. இதைப் புரிந்துகொள். குரங்குக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதலில் நிம்மதிகொள்’’ என்றார்.

துறவியின் பதில் கேட்டு அவன்  தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ``என்ன... குரங்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? அப்படி என்றால் என்னை ஏன் குரங்குகள் விடாமல் துரத்துகின்றன?’’ என்றான்

சில நிமிட அமைதி காத்த பிறகு குரு அவனுக்கு விளக்கத் தொடங்கினார்.

``உன் எண்ணங்களுக்கு நீயே அதிபதி. அவற்றை நீயே தீர்மானிக்கிறாய். வெளியிலிருந்து யாரும் மற்றொருவரின் எண்ணத்தைக் கட்டுபடுத்தவோ, மாற்றவோ முடியாது. உனக்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கற்றுக்கொள். குரங்கைப் பற்றி நினைக்கக் கூடாது என்றதும் நீ அதைப் பற்றியே நினைத்தாய். உன் சிந்தனை அதிலேயே இருந்தது. எனவே, உனக்குப் பயன்படாத ஒன்றைப் பற்றி சிந்திக்காதே. `எதுவும் நன்றாக நடக்கும்’ என்று நம்பு. ஒன்றை ஆரம்பிக்கும்போதே இப்படி நடந்து விடுமோ என நீயாக ஒரு முடிவுக்கு வந்து குழம்பிக்கொள்ளாதே. இந்த எதிர்மறை எண்ணம்தான் உன் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. அதை விட்டுவிட்டு நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்.’’

ஜென் குருவின் இந்த போதனை அவனுக்கு மட்டுமானதல்ல.  இது, நம் எல்லோருக்குமானது. நம் ஊரில், `மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காதே!’ என ஒரு வாசகம் உண்டு. அதுவும் இதற்குப் பொருந்தும். பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்ள, அதைப் பற்றிn மட்டுமே சிந்திக்க வேண்டும். வேறு ஏதுவும் தேவையில்லை. எல்லாம் நல்லதாகவே நடக்கும். இன்றைய பொழுது இனிதாக அமைய வாழ்த்துகள்!

திங்கள், 14 ஜூலை, 2025

அம்ரபாலி

அம்ரபாலி   பேசாலைதாஸ் 

வைசாலியில் ஒரு பிரபலமான வேசி அம்ரபாலி வசித்து வந்தாள். அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

ஒரு நாள் அவள் தன் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள், ஒரு இளம் புத்த துறவியைக் கண்டாள், அவரிடம் ஒரு பிச்சை பாத்திரம் மட்டுமல்ல அபாரமான இருப்பு, விழிப்புணர்வு மற்றும் கருணை இருந்தது.

அவள் அவரைப் பார்த்தவுடன், அவள் அவரிடம் விரைந்து சென்று, "தயவுசெய்து என் உணவை ஏற்றுக்கொள்" என்றாள்.

அவருக்கு உணவு வழங்கிய பிறகு, அம்ரபாலி, "மூன்று நாட்களுக்குப் பிறகு, மழைக்காலம் தொடங்கப் போகிறது, நான்கு மாதங்கள் என் வீட்டில் தங்குமாறு உங்களை அழைக்கிறேன்" என்றாள்.

(மழைக்காலம் வரும்போது புத்த துறவிகள் நான்கு மாதங்கள் நகர மாட்டார்கள். அந்த நான்கு மாதங்கள் அவர்கள் ஒரே இடத்தில் தங்குவார்கள்; எட்டு மாதங்கள் அவர்கள் தொடர்ந்து நகரும், ஒரே இடத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருக்க முடியாது.)

இளம் துறவி, "நான் என் எஜமானரிடம் கேட்பேன். அவர் அனுமதித்தால், நான் வருவேன்" என்று பதிலளித்தார்.

இதைச் சொல்லிவிட்டு அவர் வெளியேறினார்.

 இளம் துறவி சபைக்கு வருவதற்குள், இதைக் கண்ட துறவிகள் புத்தரிடம் விரைந்து வந்து, “இளம் துறவியைத் தடுத்து நிறுத்த வேண்டும். அமரபாலி அவரை நான்கு மாதங்கள் வாழ தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்… மேலும் ஒரு துறவி ஒரு விபச்சாரியின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கியுள்ளார்…! அது சரியல்ல” என்றார்.

புத்தர் அவர்களிடம், “அமைதியாக இருங்கள்! அவர் வரட்டும்” என்றார்.

இளம் துறவி வந்து புத்தரின் பாதங்களைத் தொட்டு முழு கதையையும் அவரிடம் கூறினார், “ஒரு பெண் என்னை தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறாள், அவள் ஒரு வேசி. அவள் என்னை தன் வீட்டில் நான்கு மாதங்கள் தங்கச் சொன்னாள். ஒவ்வொரு துறவியும் எங்காவது, யாரோ ஒருவரின் வீட்டில் நான்கு மாதங்கள் தங்குவார்கள். நான் என் எஜமானரிடம் கேட்கிறேன் என்று சொன்னேன், அதனால் நான் இங்கே இருக்கிறேன்.. நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்வேன்..”

புத்தர் அவரது கண்களைப் பார்த்து, “நீங்கள் தங்கலாம்” என்றார்.

இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. புத்தர் ஒரு துறவி ஒரு விபச்சாரியின் வீட்டில் தங்க அனுமதித்ததை அங்கு இருந்த ஆயிரக்கணக்கான துறவிகளால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு இளைஞன் அமர்பாலியுடன் தங்கச் சென்று மற்ற துறவிகள் கிசுகிசுக்கத் தொடங்கினர்.

 புத்தர் அவர்களிடம், “நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நான்கு மாதங்கள் கடந்துவிடும், நான் என் துறவியை நம்புகிறேன். நான் அவரது கண்களைப் பார்த்தேன் - எந்த விருப்பமும் இல்லை. நான் இல்லை என்று சொல்லிருந்தால், அவர் எதையும் உணர்ந்திருக்க மாட்டார். நான் ஆம் என்றேன்.. அவர் வெறுமனே சென்றார்.

நீங்கள் அனைவரும் ஏன் இவ்வளவு கிளர்ச்சியடைந்து கவலைப்படுகிறீர்கள்?

ஒரு துறவியின் தியானம் ஆழமாக இருந்தால், அவர் அம்ரபாலியை மாற்றுவார், அவரது தியானம் ஆழமாக இல்லாவிட்டால், அம்ரபாலியை மாற்றலாம். இது இப்போது தியானத்திற்கும் உடல் ஈர்ப்புக்கும் இடையிலான கேள்வி. நான்கு மாதங்கள் காத்திருங்கள்..”

இதையெல்லாம் மீறி, சீடர்கள், “புத்தர் அதிகமாக நம்புகிறார். அந்த மனிதன் மிகவும் இளமையாக இருக்கிறான், அம்ரபாலி மிகவும் அழகாக இருக்கிறான். அவர் தேவையற்ற ஆபத்தை எடுக்கிறார்” என்று நினைத்தார்கள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு, இளைஞன் வந்து புத்தரின் பாதங்களைத் தொட்டான். அவரைத் தொடர்ந்து அம்ரபாலி வந்தாள்.

அவள் புத்தரின் பாதங்களைத் தொட்டு, “இந்த இளம் துறவியை மயக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன், ஆனால் அது அனைத்தும் பயனற்றது. அதற்கு பதிலாக, உண்மையான வாழ்க்கை உங்கள் காலடியில் உள்ளது என்பதை அவர் விழிப்புணர்வின் மூலம் என்னை நம்ப வைத்தார். எனது அனைத்து உடைமைகளையும் உங்கள் துறவிகளின் சமூகத்திற்குக் கொடுக்க விரும்புகிறேன்.”

 பின்னர், புத்தரின் சீடர்களில் அம்ரபாலி ஞானம் பெற்ற பெண்களில் ஒருவரானார்.

தியானம் ஆழமாக இருந்தால், விழிப்புணர்வு தெளிவாக இருந்தால், அதை எதுவும் தொந்தரவு செய்ய முடியாது.

நாம் ஒன்று நினைக்க,,,,,

நாம் ஒன்று நினைக்க,,,,, பேசாலைதாஸ்  

ஒரு அரசன் தன் அரண்மனை ஜோஸியரிடம் கூறினான்:-“ஒருவரின் நடத்தை,எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி கணித்துக் கூறுவது என்பது இயலாத காரியம்.ஏனெனில் வாழ்வின் பாதையில் பல குறுக்கு வழிகள் அமைந்து உள்ளன.ஒருவன் எந்த சமயத்தில் என்ன மாதிரி சிந்திப்பான்,நடப்பான்,எப்படிக் குட்டிக்கரணம் அடித்து மாறுவான் என்பதை யாரும் அறிய முடியாது. வாழ்க்கை என்பது ஒரு புரிந்துக்கொள்ள முடியாத ஒரு புதிர் ஆகும்.”

ஜோஸியன் இதை மறுத்தான்.

அரசன் “ஒரு செயல் நடத்திக் காட்டி அதை நான் நிருப்பிக்கிறேன்” என்றார்.

அரண்மனைக்கு எதிரே ஒரு ஏரி உள்ளது. அரண்மனையிலிருந்து அதைக் கடந்து அந்தப் பக்கம் போக ஒரு பாலம் உள்ளது.அந்தப் பாலத்தைக் கடந்து வந்து அரண்மனைக்கு அருகில் தினமும் முதல் மனிதனாக உட்கார்ந்து ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுப்பான்.

”நாளைக் காலையில் அவன் நடந்து வருகிற பாலத்தின் நடுவில் ஒரு துணிப் பையில் தங்க காசுகள் போட்டு வைங்கள்.அவன் முதலில் கடப்பதால் அவன் அதிர்ஷ்டக் காரனா என்று பார்ப்போம்.”

அவ்வாறே ஜோசியன் வைத்து விட்டு அவன் அதிர்ஷ்டக்காரன்தான் என்று ஜோஸ்யம் சொன்னார்.

மறுநாள் பிச்சைக்காரன் வந்தான். பாலத்தின் ஆரம்பத்தில், வழக்கத்திற்க்கு மாறாக கண்களை மூடிக்கொண்டு பாலத்தைக் கடந்து அரண்ம்னை வாசலில் வந்து அமர்ந்துக் கொண்டான். சற்று நேரம் கழித்து அதே வழியில் வந்த ஒரு உண்மை குருட்டுப் பிச்சைக்காரி காலில் தட்டுப் பட்டதை எடுத்துணர்ந்து அதிர்ந்து தன் பையில் ஒளித்துக் கொண்டு நடையைக் கட்டினாள்.

பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஜோஸ்யனும் அதிர்ந்துப் போனார்கள்.

ஜோஸ்யன் அந்த பிச்சைக்காரனிடம் , “உனக்குதான் கண் தெரியுமே ஏன் கண்ணை மூடிக் கொண்டு பாலத்தைக்கடந்தாய்?”

“காலையில் மனசுல ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. ஒரு வேளை எனக்குக் கண் பார்வை போய்ட்டா ,எப்படி தின்மும் இங்கு வந்து பிச்சை எடுப்பது.எனக்குத் துணை யாரும் கிடையாது. யோசித்தேன். இன்றையிலிருந்து கண் இல்லாமல் நடந்து ஒத்திகை பார்த்து பழகி விட்டால் எதிர்காலத்தில் பிரச்சனை இருக்காது. யாரையும் நம்பி இருக்க வேண்டாம்... அதான் கண் முடி நடந்தேன்.”

அரசன் “நாம் இந்தச் செயலை நடத்தியதும் அவனுடைய குருட்டு நடை ஒத்திகை எண்ணமும் ஒரே நாளில் நிகழ்ந்து விட்டது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?”

ஜோஸியன் “நான் ஒன்று நினைத்தேன் தெய்வம் ஒன்று நினைத்து விட்டது” என்றார்

நாம் ஒன்று நினைக்க,,,,, பேசாலைதாஸ்

புதன், 5 மார்ச், 2025

வீரமங்கையர் வெல்வர்

 வீரமங்கையர் வெல்வர்  பேசாலைதாஸ்


‘ஓர் ஊரில் ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அவன் கடனாளி ஆகிவிட்டான். அவனுக்கு கடனாகப் பணம் கொடுத்தவன் கொடுமையானவன். பல தடவை வணிகன், தவணை சொன்னான். இதனால் கோபம் அடைந்த பணம் கொடுத்தவன், வணிகனின் வீட்டுக்குத் திடீரென்று ஒருநாள் சென்றுவிட்டான். அப்போது வணிகன் தன் ஒரே மகளுடன் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். 

தோட்டத்தின் நடைபாதையில் கூழாங்கற்கள் கறுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஆங்காங்கே கிடந்தன. உள்ளே நுழைந்த பணம் கொடுத்தவன், அவர்களைப் பார்த்து மரியாதை இல்லாமல் கத்தினான். ‘உடனே கடனைத் திருப்பிக் கொடு. இல்லாவிட்டால், உனக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்’ என்று மிரட்டினான். அதைக் கண்டு வணிகன் பயந்து நடுங்கினான். அது, மன்னர் ஆட்சிக் காலம். ஆகவே, கடன் கொடுத்தவன் மன்னரிடம் புகார் செய்தால் கடன் வாங்கியவனுக்குத் தண்டனை நிச்சயம். 

இந்தநிலையில், வணிகனுக்கோ வயது 70. அவனால், சிறைக்குப் போகவும் முடியாது; போனால், அவன் மகளைக் காப்பாற்றவும் யாருமில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தான். அப்போது, பணம் கொடுத்தவனின் பார்வை வணிகனின் மகள் மீது விழுந்தது. 

அழகின் வடிவமாக இருந்த அவளைப் பார்த்த பின்பு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், பணம் கொடுத்தான். பிறகு, வணிகனைப் பார்த்து அவன் கூறினான். ‘வணிகனே… நான் சொல்வதைக் கேள். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உனக்கு உதவ நினைக்கிறேன். ஆனால், நான் சொல்லும் ஓர் ஏற்பாட்டுக்கு நீ சம்மதிக்க வேண்டும். நான், ஒரு பையில் இங்கே கீழே கிடக்கும் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றையும், வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றையும் போடுவேன். அதிலிருந்து, உன் மகள் ஒரு கல்லை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் கல், வெள்ளை நிறக் கல்லாய் இருந்தால்… நீ கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். 

அதன்பிறகு நான் உன்னை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால், கறுப்பு நிறக் கல்லாய் இருந்தால்… உன் மகளை எனக்கு கல்யாணம் செய்து தரவேண்டும். இதற்குச் சம்மதமா?’ என்று வணிகனைக் கேட்டான்.

 வணிகனுக்கு வேறு வழி தெரியவில்லை. பின்னர், தயங்கி… தயங்கி ‘சரி’ என்றான். கீழே தரையில் கிடந்த இரண்டு நிறக் கற்களையும் எடுத்து பைக்குள் போட்டான். ஆனால், திருட்டுத்தனமாக இரண்டு கறுப்பு நிறக் கற்களையும் பைக்குள் போட்டுவிட்டான். வணிகன், இதை கவனிக்கவில்லை. ஆனால், வணிகன் மகள் இதை கவனித்துவிட்டாள். பை, அவள் முன் கொண்டு வரப்பட்டது. உள்ளே இருக்கும் இரண்டுமே கறுப்பு நிறக் கற்கள். அவற்றில் அவள், எதை எடுத்தாலும் பணம் கொடுத்தவனை கல்யாணம் செய்தே ஆக வேண்டும். தந்தையோ கண்ணீர் சிந்தியபடி நிற்க… பணம் கொடுத்தவனின் மோசடித்தனத்தை எப்படிச் சொல்வது? அப்படியே உண்மையைச் சொன்னாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. 

இந்தச் சவாலை எப்படிச் சந்திப்பது என்ற முடிவோடு வணிகன் மகள் அந்தப் பைக்குள் கையைவிட்டு ஒரு கல்லை வெளியே எடுத்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கல்லை நழுவவிட்டாள். கல் விரைந்து ஓடிப்போய் கற்குவியலோடு சேர்ந்துகொண்டது. வணிகன் மகள் கல்லை நழுவவிட்டதற்காக… பணம் கொடுத்தவனிடம் வருத்தம் தெரிவித்தாள். பிறகு அவனிடம், ‘இப்போது பையில் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல், கறுப்பு நிறமாக இருந்தால்… நான் எடுத்தது வெள்ளை நிறக் கல். அப்படியென்றால், நாங்கள் கடனைச் செலுத்த வேண்டியதில்லை. நான், உங்களை மணம் புரியவும் அவசியம் இல்லை. கல், வெள்ளை நிறமாக இருந்தால்… நான் எடுத்தது கறுப்பு நிறக் கல். அப்படி என்றால், நான் உங்களை மணந்துகொள்ளத்தான் வேண்டும். ஆகவே, பையில் என்ன நிறக் கல் இருக்கிறது என்று பார்க்கலாமா’ என்று கேட்டாள் வணிகனின் மகள்.

திணறிப் போனான் பணம் கொடுத்தவன். எடுத்த கல் போக… பைக்குள்ளே இருக்கும் ஒரு கல், கறுப்பு நிறக் கல்லாகவே இருக்கும். அவன் போட்ட இரண்டு கற்களும் கறுப்பு நிறக் கற்கள்தானே? அப்படியென்றால், அந்தப் பெண் எடுத்த கல் வெள்ளை நிறம் என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம் கொடுத்தவனின் தந்திரம் பலிக்கவில்லை. இதனால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டான்.

 மகள், வெற்றிப் புன்னகை பூத்தாள். இந்தக் கதை எதனைக் காட்டுகிறது… இதிலிருந்து என்ன தெரிகிறது? அறிவுள்ள பெண்களை யாரும் ஏமாற்ற முடியாது. எப்படிப்பட்டவரும் எளிதில் தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும்கூட பெண்கள் அதை வென்றுவிடுவார்கள். அவர்களுக்குத் தேவை வாய்ப்புகள் மட்டுமே. வாய்ப்பு மட்டும் கிடைத்து விடுமேயானால் பெண்கள் எந்தத் துறையிலும் வெல்வார்கள். ஆண்களுக்கு சமமாக… ஏன்? ஆண்களைவிடவும் அதிகம் வெற்றி பெற முடியும்...

பாய்ந்தோடும் குதிரை

பாய்ந்தோடும் குதிரை பேசாலைதாஸ்


ஞானியிடம் ஒருவர் கேட்டார்.

"ஒருவர் வாழ்வில்

முன்னேற்றம் அடைவது எதைப் பொருத்தது.?"

ஞானி சொன்னார்.

"அது நீங்கள்

கழுதையா?

எருமையா?

குதிரையா?

என்பதைப் பொருத்தது.

எப்படி என்றால், ஒரு தட்டு தட்டினால்,

கழுதை பின்னால் எட்டி உதைக்க்கும்.

எருமை அப்படியே நிற்கும்.

குதிரை பாய்ந்து ஓடும்.

அதுபோல யாராவது ஒருவர் ஒரு திட்டினால்,

சிலர் மீண்டும் திட்டுவார்கள்.

சிலர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டுக்கும்

அவமானத்திற்கும் நேர் எதிராய் செயல்படுவார்கள்.

குதிரையைப் போல பாய்ந்து ஓடுவார்கள்.

பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சரியாய்

சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. சக்தி முன்னோக்கி

பாயாததால் இவர்களிடம் முன்னேற்றம் இருக்காது.

கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாயை மூடிக்

கொண்டிருப்பதும் ஒன்றே. இவர்கள் வாழ்வு

வெறுமையாகத்தான் இருக்கும்.

முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது

வஞ்சம் கொள்ளாமல், அதையும் தன்னை திருத்திக்

கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதும் ஒன்றே..

போற்றுவார் போற்றட்டும்.... தூற்றுவார் தூற்றட்டும்.... நம் கடமையை தொடர்ந்து செய்வோம் நம் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது...

தங்கமுட்டைகள்

 தங்கமுட்டைகள்  பேசாலைதாஸ்


ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.

"தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?"

தாத்தா நீண்ட நேரம் யோசித்துவிட்டு,

"உனக்கு ஒரு சக்திவாய்ந்த வாழ்க்கைப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு முன், நீ அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், மிகப்பெரிய விஷயம் ஒன்றைச் செய்ய வேண்டும்."

சிறுமி மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

"என்ன சொல்லுங்க தாத்தா?"

தாத்தா சிறிது நேரம் யோசித்து சொன்னார்..

“நீ அக்கம்பக்கம் போய், என் நெருப்புக்கோழி ஆறு பொன் முட்டைகளை இட்டது" என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும். அதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். பிறகு ஒவ்வொரு முட்டையும் பல லட்சம் மதிப்புடையது என்றும், அவற்றை விற்று நான் கோடீஸ்வரன் ஆவேன் என்றும் சொல். விரைவில் என் வாழ்க்கை மாறும், நான் சமுதாயத்தில் பணக்காரர்களில் ஒருவராக மாறுவேன்" என்று அனைவருக்கும் சொல்.

அதன் சாராம்சம் புரியாமல் அந்த இளம்பெண் செய்தாள். அவள் திரும்பி வந்த பிறகு, அவளும் அவளுடைய தாத்தாவும் இரவும் பகலும் காத்திருந்தார்கள், ஆனால் அவர்களது அண்டை வீட்டார் யாரும் அவரை வாழ்த்தவும் அவருடன் சேர்ந்து சந்தோசத்தை கொண்டாடவும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை.

மறுநாள் காலையில், தாத்தா இளம்பெண்ணிடம்  கூறினார்:

"இப்போது, நீங்கள் அக்கம்பக்கம் சென்று, நேற்றிரவு ஒரு திருடன் வந்து என் வீட்டை இடித்து, என் நெருப்புக்கு கோழியை கொன்று, தங்க முட்டைகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான்," என்று எல்லோரிடமும் சொல். நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று சொல்!"

சிறுமி வெளியே சென்று அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, அதிர்ச்சியூட்டும் ஏராளமான மக்கள் அவர்களின் வீட்டில் குவிந்தனர். ஆச்சரியமடைந்த அந்த இளம்பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.

"ஏன் தாத்தா, இன்னைக்கு நிறைய பேர் வந்திருக்காங்க, நேற்று யாரும் வரவில்லையே?"

தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"நம்மைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்டால், மக்கள் அமைதியாக இருப்பார்கள், அதைப் புறக்கணித்து, எதுவும் நடக்காதது போல் நடந்து கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் நம்மைப்  பற்றிய கெட்ட செய்தியைக் கேட்டால், அவர்கள் அதை காட்டுத்தீ போல் அடுத்தவர்களுக்கு பரப்பி, அது உண்மையா என்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். நம் வெற்றியைக் கொண்டாட மக்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் நமது வீழ்ச்சியைக் காண ஆர்வமுடன் வருவார்கள்."

அந்த நேரத்தில், தாத்தா இளம்பெண்ணின் தோள்களில் கையை வைத்து, மீண்டும் புன்னகைத்து, பின்னர் தொடர்ந்தார்,

"இப்போது நான் உனக்குக் கற்பிக்க வேண்டிய சக்திவாய்ந்த வாழ்க்கைப் பாடம் இதுதான்...

நம்மைச் சுற்றியுள்ளவர்களால் சொல்லப்படும் மிகப்பெரிய பொய் என்னவென்றால், நாம் வெற்றிபெறுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதே. உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கூட நாம் வெற்றி பெறுவதைக் காண விரும்புவதில்லை. நாம்  அவர்களை விட ஒரு படி முன்னேறுகிறோம் என்று யாராவது உணர்ந்தால், அதை கேட்டு பொறாமைப்படுவார்கள், பதட்டப்படுவார்கள்.

பெரும்பாலான மக்கள் தங்களை விட சிறப்பாக செயல்படுபவர்களை உண்மையில் விரும்புவதில்லை. அவர்கள் பொறாமைப்படுகிறார்கள், மேலும் உள்ளுக்குள், அந்த வாழ்க்கை நமக்கு கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனாலும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்  என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதற்க்கு பதில், உங்களின் சிறந்த பதிப்பாக இருப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்களை மாற்ற முயற்சிப்பதை நிறுத்துங்கள், அவர்கள் உங்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்.

உங்களுக்கான இலக்குகளை அமைக்கவும், உங்கள் கனவுகளைப் பின்பற்றவும், உங்கள் மனதை பயிற்சி செய்யுங்கள். உங்கள் கனவுகளை அடைவதை தடுக்க யாரையும், எதையும் அனுமதிக்க   வேண்டாம்.

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 "எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ் ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிற...